சொரியாசிஸ் என்னும் செதில் உதிர் நோய்

வெட்பாலைத் தைலம் 2 சொட்டு வீதம் உள்ளுக்கு சாப்பிட்டு, பாதித்த இடங்களிலும் பூசினால் நல்ல பலன் கிடைக்கும்.

Update: 2024-09-07 00:30 GMT

"சொரியாசிஸ்" என்பது ஆட்டோ இம்யூன் வகையைச் சார்ந்த ஒரு தோல் நோயாகும். ஆட்டோ இம்யூன் நோய் என்பது, நம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியே நம் உடலைத் தாக்கி ஒரு நோயை உருவாக்குமானால் அதையே ஆட்டோ இம்யூன் என்கிறோம்.

சாதாரணமாகத் தோலின் வெளி அடுக்கு 28 முதல் 35 நாட்களுக்கு ஒருமுறை உதிர்ந்து, புது தோல் உருவாகிறது. ஆனால், சொரியாசிஸ் நோயில் 10 முதல் 15 நாளுக்கு ஒருமுறை தோல் உதிர்ந்து செதில்களாக மாறிவிடுகிறது. இது உடலின் எந்த பாகத்திலும் வரலாம். இது ஒரு நபரிடம் இருந்து இன்னொரு நபருக்கு பரவாது. பாரம்பரியமாக வருவதற்குரிய வாய்ப்புகள் உண்டு. ஒரு நபருக்கு சொரியாசிஸ் ஒருமுறை வந்து சரியான பின்னரும் மீண்டும் வராது என்று உறுதியாக சொல்ல முடியாது.

இது கட்டேட், பஸ்டுலார், எரித்ரோடெர்மிக், பிளேகு, இன்வெர்ஸ் என்று பல வகைப்படுகிறது. ஒரு சிலருக்கு நகத்தில் மட்டும் வரும், சிலருக்கு உள்ளங்கை உள்ளங்காலில் வருகிறது. இது "பால்மர் மற்றும் பிளான்ட்ர் வகை சொரியாசிஸ்". தலையில் மட்டும் வந்தால் இது "ஸ்கால்ப் சொரியாசிஸ்" எனப்படுகிறது.

இந்நோய் வந்து சரியானவர்கள் - தீவிர மன உளைச்சல், மனக்கவலைகளில் இருந்தால் அது, இந்நோயை மேலும் தூண்டும் காரணியாக உள்ளது. ஆகவே, இந்நோய் வந்தவர்கள் கவலை, பயம், பதட்டம் இல்லாமல் இருக்க முயற்சிக்க வேண்டும். இதற்கு தியானம், யோகப் பயிற்சிகள், இறைப் பிரார்த்தனைகள் செய்யலாம்.

சித்த மருத்துவத்தில் இதற்கு தீர்வு உள்ளது.

1. அமுக்கரா மாத்திரை - 2 வீதம், மூன்று வேளை சாப்பிடலாம்.

2. பரங்கிப்பட்டை சூரணம் - 1 கிராம், பலகரைப் பற்பம் - 200 மி.கி, சிவனார் அமிர்தம் - 200 மி.கி. ஆகியவற்றை மூன்று வேளை, வெந்நீர் அல்லது தேனில் கலந்து சாப்பிடலாம்.

3. பரங்கிப்பட்டை ரசாயனம் - 500 மி.கி இருவேளை உணவுக்குப் பின்பு சாப்பிடவும்.

4. வெட்பாலைத் தைலம் - 2 சொட்டு வீதம் உள்ளுக்கு சாப்பிட்டு, பாதித்த இடங்களிலும் பூசவும்.

5. ஆடுதீண்டாப்பாளைத் தைலம் வெளியே பூசி வர வேண்டும்.

 

Tags:    

மேலும் செய்திகள்