குரூப்-2, 2ஏ முதல்நிலை தேர்வு தேதியில் மாற்றம் இல்லை- டிஎன்பிஎஸ்சி

டி.என்.பி.எஸ்.சி.யின் புதுப்பிக்கப்பட்ட ஆண்டு அட்டவணையில், குரூப்-2, 2ஏ தேர்வு தேதி மாற்றப்பட்டும், காலிப்பணியிடங்கள் குறைக்கப்பட்டும் இருந்தன.

Update: 2024-08-16 21:45 GMT

சென்னை,

குரூப்-2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை கடந்த ஜூன் மாதம் 20-ந் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டது. அதன்படி, குரூப்-2 பதவிகளில் 507 பணியிடங்கள், 2ஏ பதவிகளில் 1820 பணியிடங்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 327 பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த காலிப்பணியிடங்களுக்கு கடந்த மாதம் (ஜூலை) 20-ந் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. 7 லட்சத்து 90 ஆயிரத்து 376 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு அடுத்த மாதம் (செப்டம்பர்) 14-ந் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தேர்வர்களும் அதற்கு தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் டி.என்.பி.எஸ்.சி.யின் புதுப்பிக்கப்பட்ட ஆண்டு அட்டவணையில், குரூப்-2, 2ஏ தேர்வு தேதி மாற்றப்பட்டும், காலிப்பணியிடங்கள் குறைக்கப்பட்டும் இருந்தன. இதனை சமூக வலைதளங்களில் தேர்வர்கள் பதிவிட்டு, இது உண்மையா? எனவும், இதனை தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் கேட்டு வருகின்றனர்.

இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. உயர் அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்டபோது, "தேர்வு தேதி எதுவும் மாற்றப்படவில்லை. ஏற்கனவே அறிவிப்பு வெளியான போது என்ன இருந்ததோ? அதன் அடிப்படையில்தான் தேர்வு நடத்தப்படும்'' என்றார்.

அதன்படி, டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் முதலாவதாக அறிவிக்கப்பட்டது போன்று செப்டம்பர் 14-ந் தேதி குரூப்-2, 2ஏ முதல்நிலை தேர்வு நடைபெறும் என்றும், குறைக்கப்பட்டு இருந்த பணியிடத்தை முதலாவதாக அறிவிக்கப்பட்டது போன்று 2 ஆயிரத்து 327 பணியிடங்கள் என்றும் மாற்றம் செய்து பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்