'வீர தீர சூரன்' படம் குறித்து நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு கூறியது என்ன?

‘வீர தீர சூரன்’ படத்தின் 18 நிமிட சிங்கிள் ஷாட் காட்சி குறித்து நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு பேசியுள்ளார்.

Update: 2024-10-20 14:05 GMT

சென்னை,

'சேதுபதி, சித்தா' படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62-வது படமான 'வீர தீர சூரன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த படத்திற்கு 'வீர தீர சூரன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக விக்ரமின் பிறந்த நாளன்று படக்குழு டீசர் வெளியிட்டு அறிவித்தது. இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக இருக்கிறது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு மதுரையில் விறுவிறுப்பாக நடைபெற்றது. சமீபத்தில் வெளியான 'தங்கலான்' கொடுத்த வெற்றியால் விக்ரமின் 'வீர தீர சூரன்' படத்தின் மீதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முன்னதாக, இப்படத்திற்காக 10 நாள்கள் ஒத்திகை பார்க்கட்டு எடுக்கப்பட்ட முக்கியமான காட்சி ஒன்றைக் குறிப்பிட்டு 'கலைத்தாயின் இளைய மகன்' என இயக்குனர் அருண் குமாரை நடிகர் எஸ். ஜே. சூர்யா பாராட்டியிருந்தார். அது என்ன காட்சி என பலரிடமும் ஆர்வம் எழுந்தது.

இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு, "நடிகர் விக்ரமுடன் நடித்துவரும் படத்தில் ஒரு 18 நிமிட சிங்கிள் ஷாட் காட்சி ஒன்று எடுக்கப்பட்டது. அக்காட்சியால், நிறைய அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன" எனக் கூறியுள்ளார்.

இதனால், எஸ்.ஜே.சூர்யா குறிப்பிட்ட காட்சி இதுவாகத்தான் இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்