வாழை திரைப்படம்: மாரி செல்வராஜை பாராட்டிய விக்னேஷ் சிவன்

வாழையடி வாழையாய் உன் தலைமுறையே சிறக்கும் என்று மாரி செல்வராஜை, விக்னேஷ் சிவன் பாராட்டியுள்ளார்.

Update: 2024-08-21 02:27 GMT

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் 'வாழை'. இந்த படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தில் நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, 'வெயில்' படம் மூலம் பிரபலமான பிரியங்கா மற்றும் சில சிறுவர்கள் நடித்துள்ளனர்.

சமீபத்தில், 'வாழை' படத்தின் இரண்டு பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி கவனம் பெற்றன. வரும் 23-ம் தேதி இப்படம் வெளியாக உள்ளநிலையில், சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் 'வாழை' திரைப்படம் குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

மாரி செல்வராஜ் உன் வாழ்க்கையின் நல்ல பக்கங்களை மட்டுமே படித்துவிட்டு உன் படைப்புகளை பார்க்கத் தொடங்கினேன். பிரமிப்பாக இருந்தது. இப்போது வாழை திரைப்படத்தில் உன் வாழ்க்கையின் இருண்ட பக்கங்களையும் பார்த்தபிறகு, உன்மீதான மரியாதை ஆயிரம் மடங்காய் அதிகரித்திருக்கிறது. இனி, உன் படைப்புகள் மீதான மரியாதையும் அவ்வாறே கூடும்.

வாழையடி வாழையாய் உன் தலைமுறையே சிறக்கும். சிறப்புக் காட்சிக்கு அழைத்தாய், திரை பார்த்து மெய் சிலிர்த்தேன், மீண்டும் பார்க்கும் ஆவலோடு ஆகஸ்டு 23-க்காக காத்திருக்கிறேன். மனதைக் கவரும் வாழை திரைப்படத்தை தயாரித்ததற்காக திரைப்படக் குழுவுக்கு எனது பாராட்டுகள்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்