'டீன்ஸ்' திரைப்படத்தின் கிராபிக்ஸ் மேற்பார்வையாளர் மீது நடிகர் பார்த்திபன் புகார்

'டீன்ஸ்' திரைப்படத்தின் கிராபிக்ஸ் மேற்பார்வையாளர் ஒப்பந்தத்தை மீறி கூடுதலாக பணம் கேட்டதாலும், குறிப்பிட்ட தேதியில் பணிகளை முடித்துக் கொடுக்காததாலும் நடிகர் பார்த்திபன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Update: 2024-07-05 11:11 GMT

கோவை,

பிரபல நடிகரும், இயக்குநருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபன், டீன்ஸ் என்ற புதிய திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். கோவையை சேர்ந்த ரியல் வோர்க்ஸ் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த சிவபிரசாத் என்பவர், டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கான மேற்பார்வையாளராக இருந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 20 -ம் தேதிக்குள் படத்திற்கான கிராபிக்ஸ் காட்சிகளுக்கான அனைத்து பணிகளையும் முடித்துக் கொடுப்பதாக கூறியதாக கூறப்படுகிறது. இதற்கு கட்டணமாக சிவபிரசாத் 68 இலட்சத்து 54 ஆயிரத்து 400 ரூபாய் கேட்ட நிலையில், பார்த்திபன் 42 இலட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார். மேலும் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் பிப்ரவரி மாதத்திற்குள் முடித்துக் கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் குறித்த நேரத்தில் பணிகளை முடிக்காத நிலையில் பார்த்திபன் ஏப்ரல் 19-ம் தேதி வரை கால நீட்டிப்பு கொடுத்துள்ளார்.

இருப்பினும் நான்கில் ஒரு பங்கு பணிகளை மட்டுமே முடித்த சிவப்பிரசாத், படத்தின் முக்கிய கிராபிக்ஸ் காட்சிகளை ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்க முடியாது எனக் கூறியிருக்கிறார். இதனிடையே சிவப்பிரசாத் கடந்த மாதம் நான்காம் தேதி கிராபிக்ஸ் கட்சிகளுக்கான கட்டணமாக 88 இலட்சத்து 38 ஆயிரத்து 120 ரூபாய் தொகை செலுத்த வேண்டும் என பார்த்திபனுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். ஒப்பந்தத்தை மீறி கூடுதலாக பணம் கேட்டதும், குறிப்பிட்ட தேதியில் பணிகளை முடித்துக் கொடுக்காததும் தெரியவந்துள்ளது. இவ்வாறான சூழலில் தன்னை ஏமாற்றியதாக பார்த்திபன் கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சிவபிரசாத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரியல் ஒர்க்ஸ் கிராபிக்ஸ் நிறுவனமானது பல்வேறு முன்னணி திரைப்படங்களுக்கு கிராபிக்ஸ் பணிகளை செய்துள்ளது. குறிப்பாக இயக்குனர் லோகேஷ் கனகராஜன் மாநகரம், மாஸ்டர், லியோ, விக்ரம், உள்ளிட்ட படங்களுக்கும், பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்திற்கும் இந்த நிறுவனமானது கிராபிக்ஸ் பணிகளை செய்து கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்