இந்தி மொழி குறித்து பவன் கல்யாண் சர்ச்சை பேச்சு... நடிகர் பிரகாஷ்ராஜ் பதிலடி
பவன் கல்யாணின் சர்ச்சை பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் நடிகர் பிரகாஷ்ராஜ் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.;

சென்னை,
தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் லாப நோக்கத்துக்காக தமிழ் படங்களை இந்தியில் டப்பிங் செய்வதை மட்டும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள், ஏன் அனுமதிக்கிறார்கள்? என்று ஜனசேனா கட்சியின் தலைவரும், ஆந்திர துணை முதல்-மந்திரியுமான பவன் கல்யாண் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுதொடர்பாக தனது ஜனசேனா கட்சியின் 12-வது ஆண்டு விழாவில் பேசிய அவர், "தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தங்களின் திரைப்படங்களை பணத்துக்காக இந்தியில் டப்பிங் செய்ய கூறிவிட்டு இந்தியை எதிர்ப்பது ஏன்? பாலிவுட்டில் இருந்து பணத்தை விரும்பும் அவர்கள் இந்தியை மட்டும் ஏன் ஏற்க மறுக்கின்றனர்?" என்று பேசியிருந்தார்.
இந்நிலையில், பவன் கல்யாணின் இந்த சர்ச்சை பேச்சுக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், "உங்கள் இந்தி மொழியை எங்கள் மீது திணிக்காதீர்கள்" என்பது, அந்த மொழியை வெறுப்பதால் அல்ல. அது, எங்கள் தாய் மொழியையும், நம் பாரம்பரியத்தையும் பெருமையுடன் காக்க விரும்புவதற்காகவே. இதை யாராவது பவன் கல்யாணிடம் சொல்லுங்கள்" என்று நடிகர் பிரகாஷ்ராஜ் பதிவிட்டுள்ளார்.