நடிகர் மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு பவன் கல்யாண் இரங்கல்
நடிகரும் இயக்குனருமான மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.;

சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பாரதி ராஜாவின் மகன் மனோஜ் . இவர் கடந்த 1999-ம் ஆண்டு வெளியான 'தாஜ்மஹால்' படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து மனோஜ் "சமுத்திரம், கடல் பூக்கள், ஈரநிலம், அன்னகொடி, ஈஸ்வரன், மாநாடு, விருமன்" உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 2023-ம் வெளியான மார்கழி திங்கள் என்ற படத்தையும் மனோஜ் இயக்கியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மனோஜ் உயிரிழந்துள்ளார். இவரது மறைவு திரைவட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனையடுத்து அவருக்கு திரைத்துறையினரும் அரசியல் தலைவர்களும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது நடிகரும் ஆந்திர துணை முதல்-மந்திரியுமான பவன் கல்யாண் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
'பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜாவின் திடீர் மரணச் செய்தி அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன். மனோஜின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் ஒரு நடிகராக சிறந்து விளங்கும் அதே வேளையில், இயக்குனராக தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி வந்த அவர் மாரடைப்பால் மறைந்து விட்டார் என்ற செய்தி என் மனதை பெரிதும் பாதிக்கிறது. பாரதிராஜாவின் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மகனை இழந்து வாடும் பாரதிராஜாவுக்கு மன தைரியத்தை அளிக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்' என்று தெரிவித்திருக்கிறார்.