'கங்குவா' படம் உலக தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது - இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்

‘கங்குவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது.

Update: 2024-10-26 15:50 GMT

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற நவம்பர் 14-ம் தேதி சர்வதேச அளவில் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் சிவா இயக்கத்தில் ஸ்டுடியோ கிரின் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா இந்தப் படத்தை மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளார். இந்தப் படம் வரலாற்று கதைக்களத்தில் உருவாகி உள்ளது.

இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை திஷா பதானி நடித்துள்ளார். மேலும் பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். நடிகர் சூர்யா இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதற்கிடையில் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டிருக்கும் நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், கங்குவா படம் குறித்து பேசி உள்ளார்.

அவர் பேசியதாவது, "சூர்யா 44 படப்பிடிப்பின் போது சூர்யாவிடம் 'கங்குவா' படம் குறித்து கேட்பேன். அவர் கங்குவா படத்தை பற்றி பேசினாலே உற்சாகமாக இருப்பார். கங்குவா படத்தை அவர் முடித்த பின்னும் கூட அவரிடம் அந்த படத்தின் தாக்கம் இருந்ததை பார்த்தேன். அதே சமயம் சூர்யா, கங்குவா படத்தின் ஐந்து நிமிட காட்சியை என்னிடம் காட்டினார். அதைப் பார்த்து நான் மிரண்டு போய்விட்டேன். இந்த மாதிரி ஒரு படத்திற்காக இந்திய சினிமாவில் நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டும். அனைவரையும் இந்த படம் பெருமைப்பட வைக்கும். சூர்யா இந்தியாவில் உள்ள தலைசிறந்த நடிகர்களில் ஒருவர். மேலும் ஹாலிவுட் ஸ்டைலில் நாம் ஒரு படம் பண்ண வேண்டும் என்று நினைத்து எழுதினால் அந்த படத்தை அப்படி எல்லாம் நம்மால் பண்ண முடியாது என்று தோன்றும். ஆனால் கங்குவா படம் உலக தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்