தமிழக அரசு சார்பில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா

இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது.;

Update:2025-03-27 13:35 IST
தமிழக அரசு சார்பில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா

சென்னை,

1976-ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான 'அன்னக்கிளி' படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. இவர் இதுவரை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். 10,000-க்கு அதிகமான பாடல்களை உருவாக்கி உள்ளார்.

இவர் கடந்த மார்ச் 8-ந் தேதி லண்டனில் 'வேலியண்ட்' (Valiant) சிம்பொனியை அரங்கேற்றம் செய்தார். இதன்மூலம், முழு அளவிலான மேற்கத்திய சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற சாதனையை இளையராஜா படைத்தார். இந்தியாவிற்கே பெருமை பெற்றுத்தந்த இளையராஜாவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்தன. அந்த வகையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார். மேலும் தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா விரைவில் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சட்டசபையில் இன்று பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இளையராஜாவுக்கான பாராட்டு விழா குறித்து பேசியுள்ளார். அதாவது, வருகிற ஜூன்  2-ம் தேதி இளையராஜாவின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் அன்றைய தினமே சென்னையில் அரசு சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்