டெல்லி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்... ... அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா- ஆட்சி அமைக்க உரிமை கோரினார் அதிஷி

டெல்லி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் கெஜ்ரிவால்

டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருந்தார். இதனைத் தொடர்ந்து, ஜூன் 26ம் தேதி இந்த முறைகேடு தொடர்பாக விசாரிப்பதற்காக அரவிந்த் கெஜ்ரிவாலை சி.பி.ஐ கைது செய்தது. இதனிடையே, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத்துறை தன்னை கைது செய்தது தவறு எனக் குறிப்பிட்டு சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்த வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இருப்பினும். சி.பி.ஐ கைது செய்ததன் காரணமாக அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையிலேயே இருந்து வந்தார்.

அதனைத் தொடர்ந்து, சி.பி.ஐ கைது செய்த வழக்கில் கெஜ்ரிவால் ஜாமீன் கேட்டு சுப்ரீம்கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது. பல்வேறு நிபந்தனைகள் விதித்து சுப்ரீம்கோர்ட்டு, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியதன் பேரில், கடந்த 13ம் தேதி திகார் சிறையில் இருந்து கெஜ்ரிவால் வெளியே வந்தார்.

இதையடுத்து ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசிய கெஜ்ரிவால் இரண்டு நாட்களில் தன்னுடைய முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும், நவம்பர் மாதம் நடைபெறும் மராட்டிய தேர்தலுடன் டெல்லி தேர்தலும் நடக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் டெல்லி முதல்-மந்திரி பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்துள்ளார். முன்னதாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டத்தில், டெல்லியில் நீர்வளத்துறை உள்பட 14 துறைகளை கவனித்து வரும் அதிஷியை டெல்லியின் புதிய முதல்-மந்திரியாக்க அரவிந்த் கெஜ்ரிவால் முன்மொழிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Update: 2024-09-17 11:31 GMT

Linked news