காசா - எகிப்து எல்லை இன்று திறக்கப்படும் என... ... 14வது நாளாக தொடரும் இஸ்ரேல் - ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது...!

காசா - எகிப்து எல்லை இன்று திறக்கப்படும் என நம்புகிறோம் - உலக சுகாதார அமைப்பு

காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் - இஸ்ரேல் இடையே இன்று 14வது நாளாக போர் நீடித்து வருகிறது. இதனிடையே, காசா முனையின் தெற்கு எல்லையில் எகிப்து அமைந்துள்ளது. காசாவில் இருந்து எகிப்து செல்ல ரபா நகரில் உள்ள எல்லைப்பகுதியே ஒரே வழியாகும். இஸ்ரேல் தாக்குதல் தொடங்கியதில் இருந்தே காசாவுடனான எல்லையை எகிப்து மூடியுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கானோர் காசாவில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

அதேவேளை, போர் தொடங்கிய ஓரிரு நாட்களில் ரபா எல்லை அருகே இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதனால், காசா முனையில் சிக்கியுள்ள வெளிநாட்டினரும் அப்பகுதியை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், உணவு உள்பட மனிதாபிமான நிவாரண உதவிகள் காசாவுக்கு கொண்டு செல்வதில் சிக்கல் நிலவி வருகிறது.

இதனால், உலகம் முழுவதில் இருந்தும் கொண்டுவரப்பட்ட நிவாரண உதவி பொருட்கள் சரக்கு லாரிகளில் ஏற்றப்பட்டு ரபா எல்லைப்பகுதியில் எகிப்துக்குள் நிறுத்தபட்டுள்ளன. எல்லையை திறந்தால் மட்டுமே நிவாரண பொருட்கள் காசா முனைக்கு அனுப்பி வைக்க முடியும்.

அதேவேளை, காசாவுடனான எல்லையை திறக்க எகிப்து, இஸ்ரேல், அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தின. மனிதாபிமான உதவிகள் வழங்க எல்லையை திறக்கும்படி எகிப்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதேவேளை, எகிப்து எல்லையை திறந்தால் தாக்குதல் நடத்தக்கூடாது என இஸ்ரேலுக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்தது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் எகிப்தில் இருந்து ரபா எல்லை வழியாக காசாமுனைக்கு மனிதாபிமான உதவிகள் கொண்டுசெல்லப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், எகிப்து - காசா இடையேயான ரபா எல்லைப்பகுதி இன்று திறக்கப்படலாம் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (டுவிட்டர்) பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இஸ்ரேல் - காசாவில் நடந்து வரும் மோதலால் உலக சுகாதார அமைப்பில் உள்ள நாங்கள் அனைவரும் அதிர்ச்சியும், கவலையும் அடைந்தோம்.

காசா முனைக்கு உயிர்காக்கும் நிவாரண பொருட்களை கொண்டுசெல்ல அனுமதி அளிக்கும்படி தொடர்ந்து கேட்கிறோம். ரபா எல்லைப்பகுதி இன்று திறக்கப்படும் என நாங்கள் நம்புகிறோம். அதிக காலதாமதம் ஏற்பட்டால் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகரிக்கும்’ என தெரிவித்துள்ளார். 

Update: 2023-10-20 09:59 GMT

Linked news