இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி

இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியுடன் வர்த்தகமாகி வருகிறது.

Update: 2024-08-05 07:49 GMT

மும்பை,

2024-25ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் கடந்த வாரம் செவ்வாய்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட உடன் இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது.

இதையடுத்து, பங்குச்சந்தை சரிவில் இருந்து மெல்ல மீளத்தொடங்கியது. அதன்படி, கடந்த 25ம் தேதி முதல் இந்திய பங்குச்சந்தை ஏற்றம்பெற தொடங்கியது. அந்த வகையில் இந்திய பங்கு சந்தை கடந்த 1ம் தேதி புதிய உச்சம் தொட்டது.

இந்நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. நிப்டி, பேங்க் நிப்டி உள்ளிட்ட அனைத்து குறியீடுகளும் சரிவிலேயே வர்த்தகத்தை தொடங்கின.

தற்போதைய நிலவரப்படி, நிப்டி சுமார் 738 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 23 ஆயிரத்து 978 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பேங்க் நிப்டி சுமார் 1,475 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 49 ஆயிரத்து 868 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

சுமார் 2,532 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த சென்செக்ஸ் 78 ஆயிரத்து 442 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், சுமார் 1,780 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த பேங்க் எக்ஸ் 56 ஆயிரத்து 701 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை சரிவால் முதலீட்டார்களின் சொத்து மதிப்பு ரூ.18 லட்சம் கோடி வரை குறைந்துள்ளது. மேலும் சந்தை மதிப்பீடு ரூ.457.16 லட்சம் கோடியிலிருந்து ரூ.443.29 லட்சம் கோடியாக குறைந்தது.

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை, கச்சா எண்ணெய் விலை உயர்வு, முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்தல் (Profit Booking) உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சர்வதேச அளவிலான பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவு இந்திய பங்குச்சந்தையிலும் எதிரொலிக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்