போராட்டம் எதிரொலி.. நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம்

Update: 2024-08-05 09:30 GMT
Live Updates - Page 3
2024-08-05 10:34 GMT

போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஜாத்ரபாரி மற்றும் டாக்கா மருத்துவ கல்லூரி பகுதிகளில் இன்று நடந்த மோதலில் பொதுமக்களில் 6 பேர் பலியாகி உள்ளனர்.

2024-08-05 10:33 GMT

வங்காளதேசத்தில் போராட்டம் எதிரொலியாக, பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவருடைய சகோதரி இருவரும் கோனோ பாபன் என்ற அரசு இல்லத்தில் இருந்து பாதுகாப்பான பகுதிக்கு வெளியேறி விட்டனர்.

2024-08-05 10:31 GMT

தன்மோண்டியில் உள்ள அவாமி லீக் தலைவர் ஷேக் ஹசீனாவின் அலுவலகத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். 

2024-08-05 10:30 GMT

உள்துறை மந்திரியின் வீட்டை சூறையாடிய கும்பல்

டாக்காவின் தன்மோண்டியில் உள்ள உள்துறை மந்திரி அசாதுஸமான் கான் கமாலின் வீட்டை போராட்டக்காரர்கள் தாக்கி சேதப்படுத்தியதாக புரோதோமோ அலோ செய்தி வெளியிட்டுள்ளது. பிற்பகல் 3.30 மணியளவில், ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கேட்டை உடைத்து உள்துறை அமைச்சரின் வீட்டிற்குள் நுழைந்து தாக்கி உள்ளனர். உள்ளே இருந்து கரும்புகை வெளியானதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு தாக்குதல் நடத்துகின்றனர். 

2024-08-05 10:23 GMT

இடைக்கால ஆட்சி அமைய ராணுவம் துணை நிற்கும் - ராணுவ தளபதி வக்கார் பேச்சு

பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் ராணுவ தளபதி வக்கார் மக்களிடையே பேசியதாவது:-

பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறினார். நாட்டில் சட்டம் ஒழுங்கை ராணுவம் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது. மாணவர்கள், மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும். நாட்டில் அவசர நிலை மற்றும் ஊரடங்கு தேவையில்லை. இன்றிரவுக்குள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்ய அவசியம் ஏற்படவில்லை. கலவரங்களால் பலரும் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தப்படும். போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இடைக்கால அரசு அமைத்து நாட்டை நடத்துவோம். வங்காள தேசத்தில் இடைக்கால ஆட்சி அமைய ராணுவம் துணை நிற்கும் என்றார்.

2024-08-05 10:02 GMT

வங்காளதேசத்தில் சர்ச்சைக்குரிய இடஒதுக்கீடு நடைமுறைக்கு முடிவு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நடைமுறையின்படி, வங்காளதேச விடுதலை போரில் ஈடுபட்டவர்களின் உறவினர்களுக்கு, அரசு வேலைகளில் 30 சதவீதம் வரை ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் கடந்த மாதத்தில், வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்து இருந்தது.

வங்காளதேசத்தில் ஆளும் அவாமி லீக் அரசின் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே நேற்றும் புதிதாக மோதல் ஏற்பட்டது. அரசுக்கு எதிரான போராட்டத்தில் காவல் துறை அதிகாரிகள் உள்பட 100 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து, அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டு உள்ள செய்தியில், தூதரகத்திற்கு உட்பட்ட எல்லை பகுதியில் வசித்து வரும் மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து இந்திய நாட்டினரும் தூதரகத்துடன் தொடர்பில் இருக்கவும். தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்கும்படியும் அறிவுறுத்தப்படுகிறது.

அவசரநிலை ஏற்பட்டால், 88-01313076402 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் என தெரிவித்து உள்ளது. போராட்டத்தின்போது, பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினார்கள்.

இந்த சூழலில், நேற்று மாலை 6 மணியில் இருந்து நாடு முழுவதும் காலவரையற்ற ஊரடங்கை அமல்படுத்தவும் அந்நாட்டு உள்துறை அமைச்சகம் முடிவு செய்தது. இதற்கு முன், பேச்சுவார்த்தைக்கு வரும்படி மாணவர்கள் உள்ளிட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அழைப்பு விடப்பட்டது. எனினும், அவர்கள் அதனை நிராகரித்து விட்டனர்.

இந்த சூழலில், வங்காளதேசத்தில் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் உள்ளிட்டோர் தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். டாக்கா மற்றும் பிற பகுதிகளில் வன்முறை பரவி பதற்ற நிலை தொடர்ந்து வருகிறது. இந்த சூழலில், பாதுகாப்பு நடவடிக்கையாக, டாக்கா அரண்மனையை விட்டு பிரதமர் ஷேக் ஹசீனா வெளியேறி விட்டார் என கூறப்படுகிறது. அவர் இந்தியாவில் தஞ்சமடைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

வங்காளதேசத்தில் போராட்டம் எதிரொலியாக, இணையதள சேவை முடக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி தொலைபேசி நிறுவனங்களுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. இதனால், ஏறக்குறைய நாடு முழுவதும் இணையதள சேவை முடங்கி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்