2023 உலகக்கோப்பை தொடரில் இந்த வீரர்தான் அதிக ரன் எடுத்த வீரராக இருப்பார்...இந்திய வீரரை புகழ்ந்த சேவாக்...!

உலகக்கோப்பை தொடரில் அவரது ஆட்டம் மிகச்சிறப்பாக இருக்கும் எனவே அவர் அதிக ரன் குவித்த வீரராக இருப்பார் என சேவாக் கூறியுள்ளார்.

Update: 2023-08-26 11:18 GMT

மும்பை,

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. தொடரின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் மோத உள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் சந்திக்கிறது.

இந்நிலையில் இந்த தொடருக்கு அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. கடந்த 10 வருடங்களாக எந்த வித ஐசிசி கோப்பையையும் வெல்லாத இந்திய அணி இந்த முறை சொந்த மண்ணில் நடைபெறும் உலகக்கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது.

உலகக்கோப்பை தொடர் நெருங்குவதையொட்டி பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் குறித்தும், சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்புள்ள அணிகள் குறித்தும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான சேவாக் இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தான் அதிக ரன் குவித்த வீரராக திகழ்வார் என கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

இந்த தொடரில் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிக ரன்கள் அடிப்பார்கள். ஏனெனில் இந்தியாவில் பேட்டிங்குக்கு சாதகமான மைதானங்கள் இருப்பது அவர்களுக்கு சாதகமாக இருக்கும். அவர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டுமேயானால் அது ரோகித் சர்மாவாக இருப்பார்.

இந்த தொடரில் அதிக ரன்கள் அடிப்பவர்களாக வேறு நாட்டை சேர்ந்த சில வீரர்கள் இருப்பார்கள். ஆனால் நான் ஒரு இந்தியனாக இருப்பதால் நிச்சயம் ஒரு இந்தியனையே தேர்ந்தெடுப்பேன். எனவே அது ரோகித் சர்மா தான்.

உலகக்கோப்பை என்று வந்தாலே அவருடைய எனர்ஜி லெவல், செயல்பாடுகள் அதிகமாக இருக்கும் என்பதாலேயே நான் ரோகித் சர்மாவை தேர்ந்தெடுக்கிறேன். எனவே இம்முறை கேப்டனாகவும் இருக்கும் அவர் மிகச் சிறப்பாக செயல்படுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

குறிப்பாக வெற்றியில் வித்தியாசத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அவர் பெரிய ரன்களை குவித்து அசத்துவார் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்