ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி; இலங்கை 323 ரன்கள் குவிப்பு...!

324 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறுவதோடு மட்டுமின்றி தொடரையும் கைப்பற்றலாம் என்ற நிலையில் ஆப்கானிஸ்தான் அணி ஆட உள்ளது.

Update: 2023-06-04 09:02 GMT

Image Courtesy: @ICC

ஹம்பாந்தோட்டை,

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதில் முதலவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய நிசாங்கா 43 ரன்னிலும், கருணாரத்னே 52 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

இதையடுத்து களம் இறங்கிய குசல் மெண்டிஸ் அதிரடியாக விளையாடி 78 ரன்னும், சதீரா சமரவிக்ரமா 44 ரன்னும் எடுத்தனர். தொடர்ந்து அசலங்கா 6 ரன், ஷனகா 23 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இறுதியில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 323 ரன்கள் குவித்தது. இலங்கை அணியில் ஹசரங்கா, டி சில்வா தலா 29 ரன்னுடன் அவுட் ஆகாமல் இருந்தனர்.

ஆப்கானிஸ்தான் தரப்பில் பரீத் அகமது மாலிக், முகமது நபி ஆகியோர் தலா 2 விக்கெட்டும், முஜீப், நூர் அகமது தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 324 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறுவதோடு மட்டுமின்றி தொடரையும் கைப்பற்றலாம் என்ற நிலையில் ஆப்கானிஸ்தான் அணி ஆட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்