துபாயில் யு.பி.ஐ. பண பரிவர்த்தனைக்கான இந்திய 'ரூபே கார்டு' சேவை - இந்திய துணைத்தூதர் தொடங்கி வைத்தார்

துபாயில் யு.பி.ஐ. பண பரிவர்த்தனைக்கான இந்திய ‘ரூபே கார்டு’ சேவையை இந்திய துணைத்தூதர் சதீஷ்குமார் சிவன் தொடங்கி வைத்தார்.

Update: 2024-07-03 17:53 GMT

துபாய்,

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த பிப்ரவரி மாதம் அரசு முறை பயணமாக வந்தார். அப்போது அமீரக அதிபர் மேதகு ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யானை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையே எரிசக்தி, துறைமுகங்கள், மென் தொழில்நுட்பம், டிஜிட்டல் உள்கட்டமைப்பு, ரெயில்வே மற்றும் முதலீட்டு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

அப்போது அமீரகத்தில் யு.பி.ஐ. மூலம் பண பரிவர்த்தனை செய்யும் இந்தியாவின் 'ரூபே கார்டு' பயன்பாடு மற்றும் சேவையை தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக நேற்று துபாயில் உள்ள மால் ஆப் எமிரேட்ஸ் வணிக வளாகத்தில் யு.பி.ஐ. மூலம் பண பரிவர்த்தனை செய்யும் இந்தியாவின் 'ரூபே கார்டு' சேவையை இந்திய துணைத் தூதர் சதீஷ்குமார் சிவன் தொடங்கி வைத்தார். இந்த சேவை நெட்வொர்க் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தின் மூலம் கிடைக்க வசதி செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன் மூலம் இந்தியாவில் இருந்து அமீரகத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ரூபே கார்டை பயன்படுத்தி அதிக அளவில் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்