காசாவின் சுகாதார துறையை இஸ்ரேல் அழித்துக் கொண்டிருக்கிறது.. ஐ.நா. ஆதரவு அமைப்பு குற்றச்சாட்டு

காசாவில் உள்ள சுகாதார கட்டமைபுகளை அழிக்கும் நடவடிக்கையை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று நவி பிள்ளை கேட்டுக்கொண்டுள்ளார்.

Update: 2024-10-10 16:07 GMT

நியூயார்க்:

இஸ்ரேல்-ஹமாஸ் போர் ஓராண்டை கடந்து நீடிக்கிறது. ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் நடவடிக்கையாக காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் ஹமாஸ் அமைப்பினர் மற்றும் அப்பாவி பாலஸ்தீன மக்கள் என 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த போரில் காசாவின் உள்கட்டமைப்புகள் உருக்குலைந்துள்ளன. இந்த நிலை நீடித்தால் காசாவை மீண்டும் கட்டமைப்பதற்கு பல ஆண்டுகள் ஆகும்.

இந்நிலையில், காசாவின் சுகாதாரத் துறையை இஸ்ரேல் அழித்து வருவதாகவும், இரு தரப்பினரும் மக்களை சித்ரவதை செய்ததாகவும் ஐ.நா. ஆதரவு வல்லுநர் குழு குற்றம்சாட்டி உள்ளது.

இஸ்ரேல் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள பாலஸ்தீனப் பகுதிகளில் மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்து ஆராய்வதற்காக, 2021-ல் இந்த குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவை ஐ.நா. ஆதரவு மனித உரிமைகள் கவுன்சில் நியமித்தது.

இந்த குழு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேல் மீது குற்றம் சாட்டி உள்ளது. பாலஸ்தீனிய மருத்துவ ஊழியர்களின் வாகனங்களை இஸ்ரேல் குறிவைத்து தாக்குதல் நடத்தி, வேண்டுமென்றே அவர்களை கொல்வது, பிடித்து காவலில் வைத்து சித்ரவதை செய்வது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், காசாவில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை மருத்துவ சிகிச்சைக்காக வெளியில் கொண்டு செல்வதற்காக கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும், அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவையெல்லாம் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்றும் கூறி உள்ளது.

காசாவில் உள்ள சுகாதார கட்டமைபுகளை தாக்கி அழிக்கும் நடவடிக்கையை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று குழுவின் தலைவர் நவி பிள்ளை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். சுகாதார வசதிகளை குறிவைத்து தாக்குவதன் மூலம், சுகாதார உரிமையை குறிவைப்பதாகவும், இதனால் மக்களுக்கு நீண்டகால பாதிப்புகள் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்