தாய்லாந்தின் புதிய பிரதமராக தக்சினின் மகள் பேடோங்டர்ன் ஷினவத்ரா தேர்வு

தாய்லாந்தின் இரண்டாவது பெண் பிரதமர் என்ற பெறுமையை பேடோங்டர்ன் ஷினவத்ரா பெற்றுள்ளார்.

Update: 2024-08-16 09:44 GMT

Image Coutersy: PTI

பாங்காக்,

தாய்லாந்தில் லஞ்ச வழக்கில் தண்டனை பெற்ற பிச்சித் சைபானை மந்திரியாக நியமித்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், பிச்சித் சைபானை மந்திரியாக நியமிக்க பரிந்துரை செய்த பிரதமர் ஸ்ரெத்தா தவிசினை பதவிநீக்கம் செய்து அந்நாட்டின் அரசியலமைப்பு கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது.

மந்திரிசபை உறுப்பினர்களை தகுதி அடிப்படையில் நியமிக்கும் பொறுப்பு பிரதமருக்கு இருப்பதாகவும், பிரதமர் ஸ்ரெத்தா தவிசின் அதற்கான விதிகளை மீறிவிட்டார் என்றும் கோர்ட்டு தனது உத்தரவில் தெரிவித்தது. ஸ்ரெத்தா தவிசின் பதவிநீக்கம் செய்யப்பட்டாலும், புதிய பிரதமரை நாடாளுமன்றம் அங்கீகரிக்கும் வரை அவர் காபந்து பிரதமராக நீடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

புதிய பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் ஆளுங்கட்சியான பியூ தாய் கட்சி தீவிர ஆலோசனை மேற்கொண்டது. முன்னாள் நீதித்துறை மந்திரி சாய்காசெம் நிதிசிரி மற்றும் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் இளைய மகள் பேடோங்டர்ன் ஷினவத்ரா (வயது 37) ஆகியோரின் பெயர்கள் முன்னிலையில் இருந்தன. இவர்களில், பேடோங்டர்ன் ஷினவத்ராவை கட்சி தலைமை தேர்வு செய்து நேற்று அறிவித்தது. பேடோங்டர்ன் ஷினவத்ராவுக்கு பிரதமர் பதவி வழங்க கூட்டணி கட்சிகளும் ஒப்புதல் அளித்தன.

இந்நிலையில், புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக இன்று நாடாளுமன்றத்தில வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகளை பெற்று தாய்லாந்தின் புதிய பிரதமராக தக்சினின் இளையமகள் பேடோங்டர்ன் ஷினவத்ரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அத்துடன் அவர் தாய்லாந்தின் இரண்டாவது பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்