ஹைதி: அகதிகள் படகு தீப்பிடித்ததில் 40 பேர் பலி

ஹைதி நாட்டில் சுகாதார வசதியின்மை, அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை ஆகியவற்றால் மக்கள் ஆபத்து நிறைந்த பயணங்களில் ஈடுபடுகின்றனர்.

Update: 2024-07-20 01:23 GMT

போர்ட்-ஆப்-பிரின்ஸ்,

ஹைதி நாட்டில் இருந்து அகதிகள் சிலர் துர்க்ஸ் மற்றும் கெய்கோஸ் என்ற தீவை நோக்கி படகில் புறப்பட்டனர். அப்போது படகு திடீரென தீப்பிடித்தது.

இந்த தீ விபத்தில், படகில் இருந்தவர்கள் சிக்கி கொண்டனர். இதனை சர்வதேச அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்து உள்ளது. அவர்களில் 41 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உள்ளனர். இந்த தீ விபத்தில், ஏறக்குறைய 40 பேர் வரை சிக்கி உயிரிழந்து உள்ளனர்.

இதுபற்றி சர்வதேச அகதிகளுக்கான அமைப்பின் தலைவர் கிரிகோயர் குட்ஸ்டீன் கூறும்போது, ஹைதி நாட்டில் காணப்படும் பாதுகாப்பு குறைபாடு மற்றும் புலம்பெயர்வதற்கான சட்டப்பூர்வ வழிகள் இல்லாதது ஆகியவை இதுபோன்ற சோக சம்பவங்கள் ஏற்படுவதற்கான காரணிகளாக உள்ளன என கூறியுள்ளார்.

ஹைதி நாட்டிலும் சமூக மற்றும் பொருளாதார நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. கடந்த சில மாதங்களாக ஏற்பட்டு வரும் தீவிர வன்முறை சம்பவங்களால், அவர்களின் நிலைமை இன்னும் மோசமடைந்து உள்ளது என்று கூறியுள்ளார். சுகாதார வசதியின்மை, அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை, சமீபத்திய வன்முறை போன்றவற்றால் இதுபோன்ற ஆபத்து நிறைந்த பயணங்களில் ஈடுபட வேண்டிய நிலைக்கு மக்கள் ஆளாகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்