எனது நிறுவனங்களில் ஆப்பிள் சாதனங்களுக்கு தடை விதிக்கப்படும்.. எலான் மஸ்க் அதிரடி

‘எனது நிறுவனத்திற்குள் வருபவர்கள் தங்களது ஆப்பிள் சாதனங்களை வாசலிலேயே ஒப்படைக்க வேண்டும், அவை அங்கு பாதுகாப்பாக வைக்கப்படும்’ என எலான் மஸ்க் கூறி உள்ளார்.

Update: 2024-06-11 06:42 GMT

ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனம், சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) சார்ந்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனமான ஓபன்ஏஐ நிறுவனத்தின் மென்பொருளை ஒருங்கிணைத்து தனது புதிய தயாரிப்புகளில் புகுத்த உள்ளதாக அறிவித்தது. குறிப்பாக, ஆப்பிள் சாதனங்களில் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் புகுத்தப்படும் என்றும் ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி சேவை தனது சாதனங்களில் வழங்கப்படும் என்றும் அறிவித்தது..

ஆப்பிள் நிறுவனத்தின் இந்த முயற்சிக்கு டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் சி.இ.ஓ. எலான் மஸ்க் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

தங்களுக்கென சொந்தமாக ஏ.ஐ. தொழில்நுட்பத்தை உருவாக்க முடியாத ஆப்பிள் நிறுவனம், ஓபன்ஏஐ மூலம் உங்களது (வாடிக்கையாளர்கள்) பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை உறுதிப்படுத்தி விடும் என்பது அபத்தமாக இருக்கிறது. உங்களின் தரவுகளை ஓபன்ஏ.ஐ.-இடம் கொடுத்துவிட்டால் அதற்கு என்னவாகும் என்பது பற்றி ஆப்பிள் நிறுவனத்துக்கு எந்த அக்கறையும் இல்லை. அவர்கள் உங்களை விற்கிறார்கள்

ஒருவேளை ஆப்பிள் நிறுவனம் ஓபன்ஏஐ தொழில்நுட்பத்தை ஓ.எஸ். அளவில் ஒருங்கிணைத்தால், எனது நிறுவன வளாகங்களில் ஆப்பிள் சாதனங்களுக்கு தடை விதிக்கப்படும். ஆப்பிளின் செயல் ஏற்றுக் கொள்ளவே முடியாத பாதுகாப்பு விதிமீறல். எனது நிறுவனத்திற்குள் வருபவர்கள் தங்களது ஆப்பிள் சாதனங்களை வாசலிலேயே ஒப்படைக்க வேண்டும். அவை அங்கு பாதுகாப்பாக வைக்கப்படும்.

இவ்வாறு எலான் மஸ்க் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்