ருமேனியா: மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து - 7 பேர் பலி

ருமேனியாவில் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

Update: 2021-10-02 00:16 GMT
புஷரெஸ்ட்,

ஐரோப்பிய நாடான ருமேனியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், ருமேனியாவின் தென்கிழக்கே அமைந்துள்ள கான்ஸ்டெண்டா நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் உள்பட 113 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். அந்த மருத்துவமனையில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்து காரணமாக மருத்துவமனை வளாகம் முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது. இந்த தீவிபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகள் சிக்கிக்கொண்டனர். அவர்களில் பலர் மருத்துவமனை ஜன்னல் வழியாக வெளியே குதித்து உயிர் தப்பினர்.

இந்த தீவிபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். மருத்துவமனைக்குள் சிக்கிய பலரையும் தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.

ஆனாலும், மருத்துவமனையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். மருத்துவமனையில் எவ்வாறு தீ விபத்து ஏற்பட்டது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்