வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இளைஞர்கள் ஆர்வம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இளைஞர்கள் ஆர்வம் காட்டினர்.

Update: 2022-11-12 18:39 GMT

புதுக்கோட்டை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 9-ந் தேதி வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் மொத்தம் 13 லட்சத்து 40 ஆயிரத்து 76 வாக்காளர்கள் உள்ளனர். இந்த நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் மேற்கொள்ள பணிகள் நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் வசதிக்காக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டையில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் அலுவலர்கள் விண்ணப்ப படிவங்களை வினியோகித்தனர். இதில் 18 வயது பூர்த்தியடைந்த இளைஞர்கள், இளம்பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்தனர்.

இதேபோல் சிலர் தங்களது பெயர்களில் உள்ள திருத்தங்களை மேற்கொள்ள அதற்கான படிவங்களையும் பூர்த்தி செய்து கொடுத்தனர். முன்னதாக அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடந்த சிறப்பு முகாமை கலெக்டர் கவிதாராமு ஆய்வு மேற்கொண்டார். அப்போது நகராட்சி ஆணையர் நாகராஜன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். இந்த சிறப்பு முகாமானது இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

பொன்னமராவதி தாலுகா காரையூர் பகுதிக்குட்பட்ட மேலத்தானியம், ஒலியமங்கலம், இடையாத்தூர், சடையம்பட்டி, நல்லூர், அரசமலை உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் 18 வயது பூர்த்தியானவர்கள் தங்களின் பெயர்களை சேர்த்தல், திருத்தம் செய்தல், இறந்தவர்கள் பெயர் நீக்கம், முகவரி மாற்றம் குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். மேலும் பல்வேறு வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களை பொன்னமராவதி தாசில்தார் பிரகாஷ், தேர்தல் தனித்துணை தாசில்தார் இஸ்மாயில் மற்றும் வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்