பெண் ஊராட்சி தலைவர்கள் சுயமாக முடிவெடுக்க வேண்டும்

தனிநபர் தலையீடு இன்றி பெண் ஊராட்சி தலைவர்கள் சுயமாக முடிவெடுக்க வேண்டும் என கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கூறினார்.

Update: 2023-03-08 18:45 GMT

நாகர்கோவில்:

தனிநபர் தலையீடு இன்றி பெண் ஊராட்சி தலைவர்கள் சுயமாக முடிவெடுக்க வேண்டும் என கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கூறினார்.

கலந்தாலோசனை கூட்டம்

குமரி மாவட்ட ஊராட்சித்துறையின் சார்பில் மாவட்டத்தில் உள்ள பெண் ஊராட்சி தலைவர்களுடனான கலந்தாலோசனை கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கலந்து கொண்டு பெண் ஊராட்சி தலைவர்களுக்கு சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் 95 ஊராட்சிகளில் 54 ஊராட்சிகளில் பெண் தலைவர்கள் இருப்பது மிகவும் பெருமைக்குரியது. கிராம ஊராட்சியில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக சுய முடிவெடுத்து தங்களது நிர்வாகத் திறனில் முத்திரை பதிக்க வேண்டும். பெண்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை முறையாக பயன்படுத்தி கிராம ஊராட்சிகளின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும். ஊராட்சி நிர்வாகத்தில் பெண் ஊராட்சி தலைவர்கள் எந்த ஒரு தனிநபர்களின் தலையீடுமின்றி முழு சுதந்திரமாக முடிவெடுத்து பணியாற்ற வேண்டும்.

தெரு விளக்குகள்

அனைத்து கிராம ஊராட்சி பகுதிகளிலுள்ள குடியிருப்புகளுக்கான வீட்டு வரி 2022-2023 முழுமையாக வசூல் செய்த ஊராட்சிகள் குறித்தும், வணிக நிறுவனங்களுக்கான சொத்துவரி (வீட்டுவரி), சுயநிதிக் கல்வி நிறுவனங்களுக்கான சொத்துவரி, தண்ணீர் கட்டணம், தொழில்வரி முழுமையாக வசூல் செய்யப்பட்ட கிராம ஊராட்சிகள் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம ஊராட்சி தலைவர்களிடம் கேட்டறியப்பட்டது.

மேலும் அனைத்து ஊராட்சிகளிலும் தெரு விளக்குகள் 100 சதவீதம் எரிவதை உறுதி செய்ய வேண்டும். புதிய தெருவிளக்குகள் அமைக்கவும், புதிய கட்டிடங்களுக்கான மின் இணைப்பு வழங்குதற்கான விண்ணப்பம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படாமல் நிலுவையில் இருப்பின் அந்த விவரம் உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

வீட்டு வசதி மற்றும் நகர் மேம்பாட்டுத்துறை நாள் 13-10-2020-ன் படி 10 ஆயிரம் சதுரஅடி வரை பரப்பளவுள்ள 8 வசிப்பிடம் கொண்ட கட்டிடங்களுக்கு (உயரம் 12 மீட்டர் வரை சில்ட் மற்றும் 3 தளங்கள், தரைதளம் மற்றும் 2 தளங்கள்) ஊராட்சித் தலைவரால் கட்டிட வரைபட அனுமதி வழங்கலாம். வணிக நிறுவனங்களுக்கு 2 ஆயிரம் சதுர அடிவரை ஊராட்சி தலைவரால் கட்டிட அனுமதி வழங்குவது குறித்தும், ஊராட்சி பகுதிகளில் நடைபெற்றுவரும் அனைத்துத்திட்ட பணிகளையும் கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தனிப்பட்ட கோரிக்கை

மேலும் பெண் ஊராட்சி தலைவர்களின் தனிப்பட்ட கோரிக்கைகளையும் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கேட்டறிந்தார். கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) இலக்குவன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) முருகானந்தம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்