உடைந்த வராக நதி கால்வாய் சீரமைக்கப்படுமா?

ரூ.10 கோடியில் சீரமைத்தும் பயனில்லை என்றும், உடைந்த வராக நதி கால்வாயை சீரமைக்க வேண்டும் என்றும் 15 ஏரி பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-03-19 19:14 GMT

செஞ்சி, 

செஞ்சி அருகே செவலபுரை அணைக்கட்டில் இருந்து பல்வேறு ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் வகையில் வராக நதி கால்வாய் உள்ளது. இதன்மூலம் வல்லம் ஒன்றியத்தில் உள்ள மேல்கலவாய், நெகனூர், பெரும்புகை, வடவானூர், நங்கிலி கொண்டான், ஆனத்தூர், வித்பட்டு, கடம்பூர், வடபுத்தூர், ஆனாங்கூர், கொறவணந்தல், களையூர், நாட்டார்மங்கலம் உள்பட 15-க்கும் மேற்பட்ட ஏரிகள் பயன் பெறுகின்றன.

மழைக்காலங்களில் செவலபுரை அணைக்கட்டுக்கு வரும் தண்ணீர் 20 கிலோ மீ்ட்டர் நீளமுள்ள வராக நதி கால்வாய் மூலமாக 15 ஏரிகளுக்கு செல்லும். பின்னர் அந்த ஏரியில் இருந்து பாசனத்துக்காக விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர்.

ரூ.10 கோடியில் சீரமைப்பு

விவசாயிகளின் வரப்பிரசாதமாக இருந்த இந்த கால்வாய் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்தது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, கடந்த 2015-ம் ஆண்டில் ரூ.10 கோடி மதிப்பில் வராக நதி கால்வாய் சீரமைக்கப்பட்டது.

இதில் 5 கிலோ மீட்டர் நீளத்துக்கு சிமெண்டு கால்வாயாக மாற்றப்பட்டது. மீதமுள்ள 15 கிலோமீட்டர் மண்கால்வாய் இருபுறமும் தூர்வாரி புனரமைப்பு செய்யப்பட்டது. அதன் பிறகு இக்கால்வாயில் தண்ணீர் சென்று 15 ஏரிகள் நிரம்பின.

கால்வாயில் உடைப்பு

இந்த நிலையில் அணைக்கட்டில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் கால்வாயில் வளைவு ஒன்று உள்ளது. இந்த இடத்தில் அன்னமங்கலம் மற்றும் சமத்துகுப்பம் உள்பட பல்வேறு ஏரிகளில் இருந்து உபரி நீர் கால்வாயின் குறுக்கே செல்கிறது. கடந்த 2019-ம் ஆண்டில் கால்வாயில் அதிகமாக தண்ணீர் சென்றதால் வளைவில் உடைப்பு ஏற்பட்டது. உடனே பொதுப்பணித்துறையினர் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து தற்காலிகமாக சீரமைத்தனர். இந்த மணல் மூட்டைகளும் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டது.

இதனால் 15 ஏரிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை. மாறாக அவை வறண்டு கிடக்கின்றன. இந்த ஏரியை நம்பியுள்ள விவசாயிகளின் நிலை பரிதாப நிலைக்கு சென்று விட்டது. எனவே அந்த உடைந்த வராக நதி கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று 15 ஏரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்குமா?. பொறுத்திருந்து பார்ப்போம். 

Tags:    

மேலும் செய்திகள்