இலங்கை கடற்படையினரின் அராஜகத்திற்கும், அத்துமீறலுக்கும் முடிவு கட்டுவது எப்போது? - டி.டி.வி. தினகரன்

தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

Update: 2024-10-10 09:09 GMT

கோப்புப்படம்

சென்னை,

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 21 பேரை கைது செய்திருக்கும் இலங்கை கடற்படையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களில் 21 பேரை எல்லை தாண்டியதாக கூறி கைது செய்திருக்கும் இலங்கை கடற்படை, அவர்களின் நான்கு விசைப் படகுகளையும் பறிமுதல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வங்கக் கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை கைது செய்து தொடர் அட்டூழியத்தில் ஈடுபட்டு வரும் இலங்கை கடற்படையை கண்டித்து பல்வேறுகட்ட போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் மேலும் 21 பேரை கைது செய்திருப்பது ஒட்டுமொத்த மீனவர்கள் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா - இலங்கை உறவுகளை மேம்படுத்தும் வகையில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அண்மையில் இலங்கை பயணம் மேற்கொண்ட நிலையில், 50 மீனவர்களை விடுவித்த இலங்கை அரசு, தற்போது மீண்டும் கைது நடவடிக்கையை தொடங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

எனவே, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, இனிவரும் காலங்களில் இலங்கை கடற்படையின் அச்சுறுத்தலின்றி தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்