குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் நீர்வளத்துறை-நெடுஞ்சாலைத்துறை பணிகள் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் ஆய்வு

குமரி மாவட்டத்தில் நீர்வளத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்று வரும் பணிகளை கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2023-06-07 17:40 GMT

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் நீர்வளத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்று வரும் பணிகளை கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் நேரில் ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

குமரி மாவட்ட நீர்வளத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் முடிவடைந்த பணிகளை கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

குமரி மாவட்டம் பேயன்குழி ரெயில்வே பாலம் அருகில் கடந்த 2021-ம் ஆண்டு பெய்த கன மழையின் காரணமாக அப்பகுதி மிகவும் சேதமடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. இந்த பகுதியை முதல்-அமைச்சர் நேரில் பார்வையிட்டு, சேதமடைந்த பகுதிகளை சீரமைத்து, நிரந்தர தீர்வு ஏற்படுத்தி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதன் அடிப்படையில் ரூ.2.25 கோடியில் தமிழக அரசின் நிதி ஒதுக்கீடு பெற்று, பாலத்தின் மேலும் கீழும் நிரந்தர வெள்ளத்தடுப்பு அமைக்கப்பட்டுள்ளதை நேரில் பார்வையிடப்பட்டது.

அறிவுறுத்தல்

அதைத்தொடர்ந்து சித்திரங்கோடு, சுருளக்கோடு சாலை காயக்கரை பகுதியில் ஓடும் கால்வாய்க்குமேல் நெடுஞ்சாலை துறை சார்பாக ரூ.57 லட்சத்தில் புதிய பாலம் கட்டும் பணியை நேரில் பார்வையிட்டதோடு, ஆற்றில் நீர் தேங்காமல் அவ்வழியாக தங்கு தடையின்றி செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், பணிகளை விரைந்து முடித்திடவும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், குமரி மாவட்டம் மெதுகும்மல் ஊராட்சிக்கு உட்பட்ட பாத்திமா நகர் பகுதி வழியாக செல்லும் நெய்யாறு பிரதான கால்வாயில் கனமழையினால் பாதிக்கப்பட்ட சாலை பக்கச்சுவரை ரூ.34 லட்சத்தில் நீர்வளத்துறையின் சார்பில் நிரந்தரமாக புனரமைப்பு செய்யும் பணிகள் பார்வையிடப்பட்டது. குமாரகோவில் வழியாக செல்லும் பத்மநாபபுரம் புத்தனார் கால்வாயினை நிரந்தர வெள்ளத்தடுப்பு பணி திட்டத்தின்கீழ் ரூ.60 லட்சத்தில் முடிக்கப்பட்ட பணியினையும் பார்வையிட்டு, முடிவுற்ற பணிகளை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்திடவும் துறை சார்ந்த அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டனர்.

ஆய்வின்போது நீர்வளத்துறை செயற்பொறியாளர் மாரியப்பன் (பொறுப்பு) உதவி செயற்பொறியாளர்கள் லாரன்ஸ், மெல்கி சதேக் உள்பட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்