விக்கிரவாண்டி எம்.எல்.ஏ நாளை பதவியேற்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அமோக வெற்றி பெற்றார்.

Update: 2024-07-15 17:42 GMT

சென்னை,

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த திமுகவை சேர்ந்த நா.புகழேந்தி, உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி, இடைத்தேர்தலை சந்தித்தது. திமுக சார்பில் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சாா்பில் டாக்டா் அபிநயா உள்பட 29 பேர் போட்டியிட்டனர்.

இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 10-ந்தேதி நடைபெற்றது. இதில் 82.47 சதவீதம் வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 13-ம் தேதி எண்ணப்பட்டன. இதில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா மொத்தம் 1 லட்சத்து 24 ஆயிரத்து 53 வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். பாமக வேட்பாளர் சி.அன்புமணி 56,296 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா 10 ஆயிரத்து 602 வாக்குகள் பெற்று, 3-ம் இடத்தைப் பிடித்தார்.

இதையடுத்து மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் பழனி, தேர்தல் பொதுப்பார்வையாளர் அமித்சிங் பன்சால் ஆகியோர் முன்னிலையில் விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர், வெற்றிச்சான்றிதழை அன்னியூர் சிவாவுக்கு, வழங்கினார். இந்த வெற்றியின் மூலம் ஆளும்கட்சியான தி.மு.க., விக்கிரவாண்டி தொகுதியை மீண்டும் தன்வசப்படுத்தியது.

இந்த நிலையில், விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10:30 மணி அளவில் சபாநாயகர் அப்பாவு அலுவலகத்தில் எல்.எல்.ஏவாக பதவி ஏற்கவுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்