கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு விஜய் இரங்கல்

நிலச்சரிவில் சிக்கி இதுவரை 56 பேர் பலியாகியுள்ளனர்.

Update: 2024-07-30 08:20 GMT

சென்னை,

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக அங்கு கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில், கேரளாவின் வயநாடு பகுதியில் நேற்று இரவு மிக கனமழை பெய்தது.

கனமழை காரணமாக வயநாடு சூரல்மலை பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, அதிகாலை 4.30 மணிக்கு 2-வதாக மற்றொரு பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளால் வைத்திரி, வெள்ளேரிமலை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

நிலச்சரிவில் சிக்கி இதுவரை 56 பேர் பலியாகியுள்ளனர்.நூற்றுக்கணக்கானோர் நிலச்சரிவில் சிக்கி தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கேரளா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது,

'கேரளாவில் நிலச்சரிவு என்ற சோகமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் உள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் அரசு வழங்க கேட்டுக்கொள்கிறேன், ' இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்