ஈரோடு மார்க்கெட்டில் காய்கறி விலை அதிரடி உயர்வு; பீன்ஸ், அவரை சதம் அடித்தது

ஈரோடு மார்க்கெட்டில் காய்கறி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. பீன்ஸ், அவரை விலை சதம் அடித்தது.

Update: 2023-10-06 20:59 GMT

ஈரோடு மார்க்கெட்டில் காய்கறி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. பீன்ஸ், அவரை விலை சதம் அடித்தது.

காய்கறி விலை உயர்வு

ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறிக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஈரோடு சுற்றுப்புற பகுதிகள் மற்றும் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள் இங்கு வந்து காய்கறியை வாங்கிச்செல்கிறார்கள். தாளவாடி, திருப்பூர், ஒட்டன்சத்திரம், பெங்களூரு, கர்நாடகா போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து ஈரோடு மார்க்கெட்டுக்கு காய்கறி விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு காய்கறி வரத்து அதிகரித்ததால் விலை சற்று குறைந்தது. இந்த நிலையில் புரட்டாசி மாதம் பிறந்ததையொட்டி ஏராளமானோர் சைவத்துக்கு மாறி உள்ளதால் காய்கறி தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக காய்கறியின் விலை கடந்த வாரத்தை விட நேற்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

இல்லத்தரசிகள் கலக்கம்

அதன்படி ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ அவரை விலை உயர்ந்து ரூ.130-க்கும், ரூ.80-க்கு விற்ற பீன்ஸ் ரூ.100-க்கும், ரூ.40-க்கு விற்பனையான புடலங்காய் ரூ.50-க்கும் விற்கப்பட்டது. இதேபோல் மற்ற காய்கறியும் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை விலை உயர்ந்துள்ளது.

ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் நேற்று விற்பனையான காய்கறி விலை கிலோவில் வருமாறு:-

பாகற்காய்- ரூ.60, முருங்கைக்காய்- ரூ.60, கொத்தவரங்காய்- ரூ.30, கேரட்- ரூ.70, பச்சை மிளகாய்- ரூ.50, பழைய இஞ்சி- ரூ.270, சின்ன வெங்காயம்- ரூ.50, பெரிய வெங்காயம்- ரூ.90, முட்டைகோஸ்- ரூ.20, காலிபிளவர்- ரூ.40, உருளைக்கிழங்கு- ரூ.60, தக்காளி- ரூ.15. கத்தரிக்காய்- ரூ.50, முள்ளங்கி- ரூ.60, வெண்டைக்காய்- ரூ.30, பீட்ரூட்-ரூ.70, பீர்க்கங்காய்- ரூ.70.

காய்கறி விலை உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்