காரைக்குடி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு: காளை முட்டியதில் வாலிபர் பலி

மஞ்சுவிரட்டில் பங்கேற்ற காளை முட்டியதில் படுகாயம் அடைந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2024-07-28 22:43 GMT

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருகே வ.சூரக்குடி பகுதியில் நேற்று வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்ததாகவும், அதை மீறி, வடமாடு மஞ்சுவிரட்டு நடந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் 15 காளைகளும், 150 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். பல்வேறு சுற்றுகளாக மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் 4-வது சுற்றில் ஒரு காளை களம் இறக்கப்பட்டது. அந்த காளையை அடக்க சேலத்தை சேர்ந்த மாடுபிடி வீரர் குழுவினர் களமிறங்கினர்.

இதில் மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் காளை சீறிப்பாய்ந்தது. அப்போது அந்த குழுவை சேர்ந்த சேலம் மாவட்டம் வரங்காம்பாடி பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 24) என்பவர் காளையை அடக்க முயன்றபோது, அவரை காளை முட்டி தூக்கி வீசியது.

இதில் பலத்த காயமடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குன்றக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்