பேச்சுவார்த்தை தோல்வி: திட்டமிட்டபடி நாளை பஸ் ஸ்டிரைக் - போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

போக்குவரத்து தொழிற்சங்கங்களுடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது.

Update: 2024-01-08 08:21 GMT

சென்னை,

போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், வாரிசு பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் ஆகிய 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நாளை முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்து உள்ளன.

இதனையடுத்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சென்னையில் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அது தோல்வியில் முடிவடைந்தது.

இந்த நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கங்களுடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை ஆணையரகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் இளங்கோ, மாநகரப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆல்பி ஜான் ஆகியோர் பங்கேற்றனர். தொழிற்சங்கங்கள் தரப்பில் சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவையை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து திட்டமிட்டபடி நாளை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். ஏற்கனவே 2 முறை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், தற்போது 3-வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்