திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவிலில் ஆவணி திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2023-09-10 18:45 GMT

தென்திருப்பேரை:

திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவிலில் ஆவணி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆவணி திருவிழா

நவதிருப்பதிகளில் 8-வது தலமான திருக்கோளூர் வைத்தமாநிதி கோவிலில் ஆவணி திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை 7 மணிக்கு விஸ்வரூபம் நடந்தது. காலை 7.30 மணிக்கு திருமஞ்சனம், காலை 9 மணிக்கு நித்தியல், காலை 9.30 மணிக்கு உற்சவர் வைத்தமாநிதி மற்றும் மதுரகவி ஆழ்வார் இருவரும் கொடி மரம் அருகில் எழுந்தருளினர்.

காலை 9.45 மணிக்கு கொடிப்பட்டம் மாட வீதியை வலம் வந்து காலை 10.20 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. பின்னர் கொடி மரம் பூஜையை தொடர்ந்து தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. தினமும் மாலை 6 மணிக்கு சுவாமி வைத்தமாநிதி பெருமாள் பரங்கி நாற்காலி, சிம்ம வாகனம், அனுமன் வாகனம், சேஷ வாகனம் போன்ற பல்வேறு வாகனங்களில் ரத வீதி உலா நடைபெறும்.

தேரோட்டம்

வருகிற 14-ந் தேதி இரவு 7 மணிக்கு சுவாமி வைத்தமாநிதி பெருமாள் கருட வாகனத்திலும், மதுரகவி ஆழ்வார் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். வருகிற 19-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் ஸ்தலத்தார் திருவாய்மொழி பிள்ளை சடகோபன் சுவாமி, நிர்வாக அதிகாரி அஜித், தக்கார் கோவல மணிகண்டன், ஆய்வாளர் லோகநாயகி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்