சமூகத்தை பிளவுபடுத்த திமுக முயற்சிக்கிறது - ஜே.பி.நட்டா

தேசிய அரசியலில் தமிழகத்தின் பங்களிப்பை என்றும் மறக்க முடியாது என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-22 18:31 GMT

Image Courtesy: ANI

காரைக்குடி,

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.

பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:- "இங்கு கூடியிருக்கும் கூட்டத்தைப் பார்த்து நான் பெருமைப்படுகிறேன். தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு எதிர்காலம் உள்ளது என்ற தெளிவான செய்தியை இது அளிக்கிறது. தேசிய அரசியலில் தமிழகத்தின் பங்களிப்பை என்றும் மறக்க முடியாது.

தமிழகத்தின் கலாச்சாரம் புனிதமானது. இது அறிவு ஜீவிகளின் மண். இந்த மண்ணிற்கு தலை வணங்குகிறேன். வரும் காலத்தில் தமிழகத்தில் தாமரை ஆட்சி மலரும்.

பாஜக தான் தேசிய கட்சியாக உள்ளது. மற்ற கட்சிகள் சுருங்கிவிட்டது. இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் குடும்ப அரசியல் உள்ளது. தமிழகத்தில் கருணாநிதி, ஸ்டாலின் என வரிசைகட்டி வருகின்றனர். சமூகத்தை பிளவுபடுத்த திமுக முயற்சிக்கிறது. பிளவுப்படுத்துவதை தவிர உங்களுக்கு எந்த நோக்கமும் இல்லை. கருத்தியல் ரீதியாக, நீங்கள் ஒரு பெரிய பூஜ்ஜியம். மக்களுக்கு வளர்ச்சியை ஏற்படுத்துவதே எங்கள் சித்தாந்தம்.

உலக பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்த நிலையிலும் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி கோடி கோடியாக கொட்டி கொடுக்கிறார்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்