ஒரே ஒரு மாணவி படித்து வந்த அரசுப்பள்ளி தற்காலிக மூடல்

ஒரே ஒரு மாணவி படித்து வந்த அரசு தொடக்கப்பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது.

Update: 2024-06-30 02:06 GMT

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா கடம்பூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது. இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வந்தனர். ஆனால் நாளடைவில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்து கொண்டே வந்தது. ஒரு மாணவி மட்டுமே படித்து வந்தார்.

இந்நிலையில் போதிய மாணவர்கள் சேர்க்கை இல்லாததால் அந்த மாணவியும் அருகில் உள்ள குருந்தங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஏற்கனவே இந்த பள்ளியில் பணியாற்றி வந்த இடைநிலை ஆசிரியர் பாக்கியராஜ், முள்ளிமுனை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாற்றுப்பணி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அதேபோல் இப்பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியர் அமலோற்பவ தாஸ் அருகிலுள்ள கவலை வென்றான் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு தலைமை ஆசிரியராக மாற்றம் செய்யப்பட்டார்.

இதனால் கடம்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது. இந்த கல்வியாண்டின் முதல் பருவத்திற்குள் இப்பள்ளியில் குறைந்தபட்சம் 5 மாணவ-மாணவிகளை சேர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. அவ்வாறு மாணவர்கள் சேரும்பட்சத்தில் இப்பள்ளி மீண்டும் செயல்பட தொடங்கும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்