கல்லூரி மாணவியின் ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் பரப்பிய வாலிபர் கைது

ஆசைக்கு இணங்காததால், கல்லூரி மாணவியின் ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் பரப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-27 21:31 GMT

நாகர்கோவில்:

ஆசைக்கு இணங்காததால், கல்லூரி மாணவியின் ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் பரப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

மாணவியின் ஆபாச படம்

களியக்காவிளை பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்த நிலையில் அந்த மாணவியின் ஆபாச படங்கள் கல்லூரி நண்பர்களின் சமூக வலைதளத்தில் வந்தன. அதை கண்டு அதிா்ச்சி அடைந்த மாணவி, மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது குடும்ப வறுமை காரணமாக கல்லூரியில் படித்து கொண்டே மாணவி, தேவிகோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும், அதே நிறுவனத்தில் கருங்கல் கருமாவிளையை சேர்ந்த ஸ்டாலின் பெனட் (வயது 35) என்பவர் வேலை செய்ததும் தெரிய வந்தது.

வாலிபர் கைது

ஓரே நிறுவனத்தில் பணியாற்றியதால் ஸ்டாலின் பெனட்டுக்கும், மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மாணவியை ஆபாசமாக படம் எடுத்த ஸ்டாலின் பெனட், அதை காட்டி தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.

ஆனால் அதை மாணவி ஏற்க மறுத்ததால், ஆத்திரமடைந்த ஸ்டாலின் பெனட், மாணவியின் ஆபாச படங்களை இன்ஸ்டாகிராம் மூலம் கல்லூரி நண்பர்களுக்கு அனுப்பியது தெரிய வந்தது. அதைத்தொடா்ந்து ஸ்டாலின் பெனட்டை சைபர் கிரைம் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்