சென்னையில் இருந்து மும்பை செல்லும் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு - பயணிகள் திடீர் போராட்டம்

சென்னையில் இருந்து மும்பை செல்ல வேண்டிய விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் மாற்று விமானம் கேட்டு பயணிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-13 09:00 GMT

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு 9.40 மணிக்கு மும்பைக்கு விமானம் செல்ல இருந்தது. அதில் மும்பை செல்வதற்காக 120 பயணிகள் சோதனைகள் முடித்து விட்டு விமானத்தில் ஏற காத்திருந்தனர்.

அப்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பதால், விமானம் ரத்துசெய்யப்பட்டதாக அறிவிப்பு செய்யப்பட்டது. இதனால் அந்த விமானத்தில் செல்ல காத்திருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். விமான நிறுவன கவுண்ட்டரை பயணிகள் முற்றுகையிட்டு அங்கிருந்த ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

எந்தவித அறிவிப்பும் இல்லாமல் திடீரென விமானம் ரத்து என்றால் நாங்கள் என்ன செய்வது?. எங்களுக்கு மாற்று விமானம் வரவழைத்து மும்பை செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மும்பை செல்லும் வேறு விமானத்தில் அனைவரையும் அனுப்பி வைக்கிறோம் என்றனர். ஆனால் இரவு ஓரிரு விமானம் தான் இருக்கும். அதில் எப்படி எல்லா பயணிகளையும் அனுப்ப முடியும். எனவே எங்களுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்து அனுப்ப வேண்டும் என கூறினர்.

இதையடுத்து பயணிகளிடம் விமான நிறுவன அதிகாரிகள் சமரசம் பேசி வருகின்றனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்