காவிரியில் கழிவுகள் கலப்பு: கர்நாடகத்தின் அத்துமீறலை தமிழக அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது - டாக்டர் ராமதாஸ்

காலம் காலமாக சட்டத்திற்கு எதிரான செயலை கர்நாடகம் செய்து கொண்டிருக்கிறது என டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2023-04-29 16:00 GMT

சென்னை,

காவிரி, தென்பெண்ணையில் கலக்கப்பட்ட கழிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கிட்டு அதற்கான இழப்பீட்டை கர்நாடகத்திடமிருந்து பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;-

"தமிழ்நாட்டிற்கு வரும் காவிரி ஆற்றில் கர்நாடகம் மிகப்பெரிய அளவில் கழிவுகளை கலக்கச் செய்வதாகவும், அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கர்நாடக தலைமைச் செயலாளருக்கு தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். இது பாராட்டப்பட வேண்டிய நடவடிக்கை ஆகும்.

காவிரியிலும், தென்பெண்ணையாற்றிலும் கர்நாடகம் கழிவுநீரை கலப்பது ஒன்றும் புதிதல்ல. காலம் காலமாக இந்த சட்டத்திற்கு எதிரான செயலை கர்நாடகம் செய்து கொண்டிருக்கிறது. கர்நாடகத்தின் இந்த அத்துமீறலை தமிழகம் வேடிக்கை பார்க்கக் கூடாது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு கர்நாடகத்திடமிருந்து இழப்பீடு பெற வேண்டும்.

காவிரியில் கழிவுகளை கலந்ததற்காக ரூ.2,400 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி கடந்த 2017-ம் ஆண்டே சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது. கிடப்பில் உள்ள அந்த வழக்கை விரைவுபடுத்தவும், 2017-ம் ஆண்டுக்கு பிறகு கலந்த கழிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கிட்டு அதற்கான இழப்பீட்டையும் சேர்த்து பெறுவதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்."

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.



Tags:    

மேலும் செய்திகள்