கல்வி உதவித்தொகை பெயரில் நூதன மோசடி

கல்வி உதவித்தொகை பெயரில நூதன மோசடி நடைபெறுவதாகவும், உஷாராக இருக்க போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Update: 2023-09-11 19:11 GMT

ஆன்லைன் மோசடி

நவீன காலத்தில் தற்போது சைபர் கிரைம்கள் அதிகரித்தப்படி உள்ளது. ஆன்லைனில் பண மோசடி, வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்தல் உள்பட பல்வேறு முறையில் மோசடி நடைபெறுகிறது. இதில் பெரும்பாலும் மர்மநபர்கள் செல்போன் எண்ணிற்கு வாட்ஸ்-அப்பில் குறுந்தகவலில் லிங்க் அனுப்பி அதில் தங்களது கைவரிசையை காட்டுகின்றனர்.

குறைந்த வட்டியில் கடன் தருதல், பரிசு விழுந்ததாக கூறி நம்ப வைத்தல், வேலைக்கு ஆட்கள் வேலை தேவை, ஆன்லைனில் வேலை கைநிறைய சம்பளம் என ஆசைவார்த்தை கூறி அவர்களை நம்ப வைத்து அவர்களிடம் இருந்து நேரடியாகவோ அல்லது அவர்களது வங்கி கணக்கில் இருந்து மறைமுகமாகவோ பண மோசடியில் ஈடுபடுகின்றனர். இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் பொதுமக்கள் சிலர் இன்னும் ஏமாந்து கொண்டு தான் உள்ளனர்.

கல்வி உதவித்தொகை பெயரில் மோசடி

இந்த நிலையில் கல்வி உதவித்தொகை பெயரில் நூதன மோசடி நடைபெறுவதாகவும், மாணவர்கள் உஷாராக இருக்கும்படியும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் இது தொடா்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்ட போலீசாரும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதிவுகளை சமூக வலைத்தளத்தில் பகிா்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், "பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அரசிடம் இருந்து கல்வி உதவித்தொகை பெற்று தருவதாக கூறி கல்வி அதிகாரி போல தங்களை அறிமுகப்படுத்தி கொண்டு, வங்கி கணக்கு விபரங்கள் மற்றும் மோசடி நபர்கள் அனுப்பும் கியு ஆர் கோடை ஸ்கேன் செய்வதன் மூலம் தங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் பறிபோக வாய்ப்பு உள்ளது. எனவே இது போன்று வரும் கியு ஆர் கோடை ஸ்கேன் செய்ய வேண்டாம்'' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்