பணிமூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்

நடைபெற உள்ள 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு பணிக்கு ஆசிரியர்களை பணிமூப்பு அடிப்பைடையில் நியமிக்க வேண்டும் என ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

Update: 2023-03-12 18:45 GMT

நடைபெற உள்ள 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு பணிக்கு ஆசிரியர்களை பணிமூப்பு அடிப்பைடையில் நியமிக்க வேண்டும் என ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

பணிமூப்பு அடிப்படையில்

ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவரும், ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகேசன் மாவட்ட கல்வி அலுவலருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு பொதுத்தேர்வு வரும் ஏப்ரல் 6-ந் தேதி முதல் தொடங்க உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 100-க்கு மேற்பட்ட மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. பொதுத்தேர்வை நடத்துவதற்கு ஆசிரியர்களை துறை அலுவலர், வழித்தட அலுவலர், பறக்கும் படை அலுவலர், நிற்கும் படை அலுவலர் மற்றும் அறை கண்காணிப்பாளர் என பிரிக்கப்பட்டு அவரவர்களுக்கு மாவட்டக்கல்வி அலுவலரால் தேர்வு பணி ஒதுக்கப்படும்.

இந்த பணிக்கு ஆசிரியர்களை நியமனம் செய்யும்போது அவர்களின் பணி மூப்பு அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும். பணியில் இளையோரை துறை அலுவலராகவும், பணியில் மூத்தோரை கீழ்நிலை பணியில் நியமிக்கும் போது மூத்த ஆசிரியர்கள் மன உளச்சல் அடைகின்றனர். இதனால் அவர்களுக்கு கொடுக்கப்படும் பணியில் தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது.

பஸ் வசதி

எனவே, அறை கண்காணிப்பாளர் பணியை தவிர மற்ற தேர்வு பணிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்யும் போது அந்தந்த ஆசிரியர்களின் பணிநியமன முன்னுரிமைப்படி தேர்வு பணி நியமனம் செய்ய வேண்டும். அதேபோல் ஆசிரியர்கள் பணிபுரியும் வட்டாரங்களில் அவர்களுக்கு தேர்வு பணி வழங்க வேண்டும். பெண் ஆசிரியர்களுக்கு பஸ் வசதியுள்ள தேர்வு மையங்களுக்கு தேர்வு பணி வழங்க வேண்டும்.

மாவட்டத்தில் பணிபுரியும் ஒரு சில ஆசிரியர்கள் குடும்ப சூழல் காரணமாக அவர்களின் சொந்த வசிப்பிடத்தில் தங்கி தினமும் நீண்ட தூரம் பயணம் செய்து பள்ளிக்கு வருகிறார்கள். அப்படிப்பட்ட ஆசிரியர்களுக்கு தேர்வு பணி வழங்கும் போது அவர்களின் வசிப்பிடத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும். மேலும் கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தேர்வு பணியிலிருந்து விருப்ப அடிப்படையில் விலக்களிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்