மாட்டு வண்டிகளுக்கு நேரடியாக மணல் வினியோகிக்க கோரி மனு

மாட்டு வண்டிகளுக்கு நேரடியாக மணல் வினியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளக்கோரி தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Update: 2023-09-20 18:35 GMT

மாட்டுவண்டி தொழிலாளர்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கரூர் மாவட்ட மணல் மாட்டுவண்டி தொழிலாளர் சங்கம் சார்பில் ஒரு மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- கரூர் மாவட்டத்தில் கடந்த 9-2-2023 முதல் மணல் குவாரிகள் திறக்கப்பட்டு மணல் வினியோகம் நடைபெற்று வருகிறது. லாரிகள் மற்றும் மாட்டு வண்டிகளுக்கென தனித்தனி மையங்களில் மணல் அளிக்கப்பட்டு வருகிறது. இதில் லாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் நிலை உள்ளது. மணல் லாரிகள் மூலம் நேரடியாக ஆறுகளில் இருந்து மணல் எடுப்பதால் விதிமுறைகளை பின்பற்றாமலும், லாபநோக்கிலும் நேரடியாக விற்பனைக்கு எடுத்து செல்லும் நிலைமையும் தலை தூக்கியுள்ளது. இதனால் 2 ஆண்டுகள் பயன்படுத்தும் காலம் இருந்தும் குறுகிய காலத்திலேயே மணலை அள்ளி முடிக்கும் பணியில் வேகம் காட்டப்படுகிறது. இதனை நம்பியிருக்கும் நூற்றுக்கணக்கான மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகி உள்ளது.

நேரடியாக மணல்

ஒட்டுமொத்தமாக லாரிகள் மூலம் மணல் அள்ளப்படுவதற்கும், லாரிகளுக்கு மணல் வினியோகிப்பதையும் ரத்து செய்தால் மட்டுமே மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். முறைகேடுகளையும் தடுக்க முடியும். சுற்றுச்சூழல் விதிமுறைகளையும் கடைபிடிக்க முடியும். அமலாக்கத்துறை ஆய்வுகள் காரணமாக மணல் வினியோக பணிகள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.

இதனால் அன்றாட வேலையின்றி மாட்டு வண்டி தொழிலாளர்கள் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளதோடு கால்நடைகளை பராமரிக்க பெரும் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காக்க, மாட்டு வண்டிகளுக்கு நேரடியாக மணல் வினியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்