பரமத்திவேலூர் பகுதியில்மரவள்ளிக்கிழங்கு டன் ரூ.9 ஆயிரத்துக்கு விற்பனைவிலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

Update: 2023-01-11 18:45 GMT

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு டன் ரூ.9 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மரவள்ளிக்கிழங்கு

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டுள்ளனர்.

இந்த பகுதிகளில் விளையும் மரவள்ளிக்கிழங்குகளை வியாபாரிகள் வாங்கி சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்குட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். கிழங்கு ஆலைகளில் மரவள்ளிக்கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி

மரவள்ளிக்கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் அதில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். அதன்படி கடந்த வாரம் மரவள்ளிகிழங்கு டன் ஒன்று ரூ.8 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது டன் ரூ.1,000 வரை உயர்ந்து ரூ.9 ஆயிரத்திற்கு விற்பனையானது.

அதேபோல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்று கடந்த வாரம் ரூ.9 ஆயிரத்து 500 விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.500 வரை உயர்ந்து ரூ.10 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. மரவள்ளிக்கிழங்கு விலை உயர்ந்துள்ளதால் அதனை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்