மாசி வீதிகளில், 216 விநாயகர் சிலைகள் ஊர்வலம் - வைகை ஆற்றில் கரைப்பு

மதுரையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்கப்பட்ட 216 சிலைகள் மாசி வீதிகளில் ஊர்வலமாக சென்று வைகை ஆற்றில் கரைக்கப்பட்டது.

Update: 2023-09-20 21:45 GMT

மதுரையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்கப்பட்ட 216 சிலைகள் மாசி வீதிகளில் ஊர்வலமாக சென்று வைகை ஆற்றில் கரைக்கப்பட்டது.

216 சிலைகள் கரைப்பு

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மதுரை மாநகரில் இந்து முன்னணி, பாரதீய ஜனதா உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகள், பக்தர்கள் சார்பில் பல்வேறு இடங்களில் 3 அடி முதல் 15 அடி உயரம் வரை விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டனர். அங்கு தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சிலைகளை விநாயகர் சதுர்த்தி முடிந்து 3-வது நாள் அன்று வைகை ஆற்றில் கரைப்பது வழக்கம். அதன்படி நகரில் வைக்கப்பட்ட 209 பெரிய சிலைகள் மற்றும் 7 சிறிய விநாயகர் சிலைகள் என மொத்தம் 216 சிலைகள் நேற்று மதியம் கீழமாசி வீதி விளக்குத்தூண் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு வந்த பல்வேறு விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை செய்து ஊர்வலம் தொடங்கியது. சிலைகள் அனைத்தும் நான்கு மாசி வீதியில் வலம் வந்தது. பின்னர் வடக்குமாசி வீதி சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோவில் வழியாக சென்று வைகை ஆற்றின் தென்கரை பகுதியில் இரவு வரை கரைக்கப்பட்டது. அப்போது மேளதாளங்கள் முழங்க நடனமாடி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாக ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

போக்குவரத்து நெரிசல்

இதையொட்டி போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் மதுரை நகர் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். மேலும் மதியம் 1 மணியில் இருந்து மாசி வீதிகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. போலீசார் தெரிவித்தும் மாசிவீதிகளில் ஒரு சில இடங்களில் கடைக்காரர்கள், பொதுமக்கள் வாகனங்களை அகற்றாமல் வைத்து இருந்தனர். இதனால் போலீசார் மிகவும் கஷ்டப்பட்டு வாகனங்களை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றதால் பொதுமக்கள் நகருக்குள் வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதை தொடர்ந்து போலீசார் போக்குவரத்தை மாற்றி அமைத்து ஓரளவு சீர் செய்தனர்.

அவனியாபுரம்

அவனியாபுரம் மந்தை திடலில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செம்பூராணி ரோடு, மேலத்தெரு,முத்துக்குமார் தெரு, பெரியசாமி நகர், எம்.எம்.சி. காலனி உள்ளிட்ட பகுதியில் 21 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த விநாயகர் சிலைகள் நேற்று அவனியாபுரம் பஸ் நிலையத்தில் தொடங்கி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அய்வத்தனேந்தல் கண்மாயில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டது. அவனியாபுரம் பகுதி தலைவர் இந்து முன்னணி மூர்த்தி, மாவட்ட செயலாளர்கள் சதீஸ், சுந்தர், முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் தி.மு.க.வின் அவனியாபுரம் பகுதி செயலாளர் ஈஸ்வரன், வட்டச்செயலாளர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருமங்கலம்

திருமங்கலத்தில் 11 இடங்களில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றன. தொடர்ந்து இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருந்த 11 விநாயகர் சிலைகளும் கக்கன் காலனி ஓடை அருகே கொண்டுவரப்பட்டன. அங்கிருந்து விநாயகர் சிலை ஊர்வலம் தாரை, தப்பட்டை முழங்க மதுரை சாலை தாலுகா அலுவலகம், தேவர் சிலை வழியாக மீனாட்சி அம்மன் கோவில், சந்தைப்பேட்டையை அடைந்து விநாயகர் சிலைகள் சிங்காற்றில் கரைக்கப்பட்டன. நகரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு திருமங்கலம் போலீஸ் துணை சூப்பிரண்டு வசந்தகுமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்