தி.மு.க.வுடனான நெருக்கத்தை ஓ.பன்னீர்செல்வம் மகன் வெளிப்படுத்தியுள்ளார்

தி.மு.க.வுடனான நெருக்கத்தை ஓ.பன்னீர்செல்வம் மகன் வெளிப்படுத்தியுள்ளார் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2022-09-06 21:40 GMT

தி.மு.க.வுடன் நெருக்கம்

திண்டுக்கல்லில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சென்னை செல்வதற்காக நேற்று இரவு திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது;-

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றம் சென்றுள்ளார். அதில் விசாரணை முடிந்த பின்புதான் தெரியும். அதற்கிடையில் அது குறித்து கருத்து கூற முடியாது. தி.மு.க. அரசின் புதுமைப்பெண் திட்டத்தை வரவேற்றதன் மூலம் ரவீந்திரநாத் (ஓ.பன்னீர்செல்வம் மகன்) ஏற்கனவே தி.மு.க.வுடன் இருக்கும் நெருக்கத்தை வெளிக்காட்டியுள்ளார்.

தேர்தல் நேர்மையாக நடக்காது

கூட்டுறவு சங்க தேர்தல் நேர்மையாக நடக்காது. அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக நடத்தினோம். ஆனால் உள்ளாட்சி தேர்தலை தி.மு.க. நேர்மையாக நடத்தவில்லை. கூட்டுறவு சங்க தேர்தலையும் அவர்கள் நேர்மையாக நடத்த மாட்டார்கள். இருந்தபோதும் ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும் என்று போராடுவோம்.

இலவசங்கள் குறித்து ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. இலவசங்கள் வழங்குவது தவறு என்று பிரதமர் மோடி கூறுவது அவருடைய கட்சியின் நிலைப்பாடு. ஆனால் எம்.ஜி.ஆர். ஆட்சியிலும் சரி, ஜெயலலிதா ஆட்சியிலும் சரி எண்ணற்ற இலவச திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். எதிர்காலத்திலும் நாட்டு மக்களுக்கு என்ன தேவையோ அதை நாங்கள் செய்வோம். மக்களுக்கு எந்த வகையில் நன்மை பயக்கும் திட்டங்கள் இருக்குமோ? அதை செயல்படுத்துவோம்.

குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு

இந்தியா ஜனநாயக நாடு. அந்தந்த மதமும், தெய்வமும் அவரவருக்கு புனிதமானது. போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு தவறி விட்டது. ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் முதல்-அமைச்சர் அதற்கு கருத்து கேட்பு கூட்டம் நடத்துகிறார். சூதாட்டத்திற்கு கருத்து கேட்பு கூட்டம் நடத்தும் ஒரே முதல்-அமைச்சர் ஸ்டாலின்தான். மக்களுக்கு நன்மை கிடைக்கும் எந்த திட்டத்தையும் தி.மு.க. செயல்படுத்தவில்லை. அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்குகிறது. குற்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.பின்னர் அவர் திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்