நீலகிரி சிறப்பு மலை ரெயில் சேவை ஆகஸ்டு 5-ந் தேதி வரை நீட்டிப்பு

நீலகிரி சிறப்பு மலை ரெயில் சுற்றுலா பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Update: 2024-06-28 01:55 GMT

ஊட்டி,

மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். கோடை சீசன், 2-வது சீசன் காலங்களில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தரும்போது, ஊட்டி மலை ரெயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.

ரெயிலில் கூட்டம் அலைமோதுவதால், சிலருக்கு டிக்கெட் கிடைக்காமல் போவதால் ஏமாற்றம் அடைகின்றனர். எனவே சுற்றுலா பயணிகளுக்காக சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுகிறது. இதன்படி இந்த ஆண்டு கோடை சீசனை முன்னிட்டு ஊட்டி - குன்னூர், ஊட்டி - மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி - கேத்தி இடையே கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி முதல் சிறப்பு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சிறப்பு ரெயில் ஜூலை 1-ந்தேதி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சுற்றுலா பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால், சிறப்பு ரெயில் சேவை நீட்டிக்க கோரிக்கை விடுத்தனர். இதனால் தற்போது மீண்டும் மலைரெயில் சேவை வருகிற ஆகஸ்டு 5-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குன்னூர் - ஊட்டி இடையே சிறப்பு மலைரெயில் சேவை ஜூலை 5-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 5-ந் தேதி வரை அனைத்து சனி, ஞாயிற்றுகிழமைகளில் குன்னூரில் காலை 8.20-க்கு புறப்பட்டு 9.40-க்கு ஊட்டி வந்தடையும். ஊட்டியில் இருந்து மாலை 4.45-க்கு புறப்பட்டு 5.55-க்கு குன்னூர் சென்றடையும்.

மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே ஆகஸ்டு 5-ந் தேதி வரை அனைத்து வெள்ளி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் மட்டும் மேட்டுப்பாளையத்தில் காலை 9.10-க்கு புறப்பட்டு மதியம் 2.25-க்கு ஊட்டிக்கு வந்தடையும். ஊட்டி - மேட்டுபாளையம் இடையே அனைத்து சனி, திங்கள்கிழமைகளில் மட்டும் காலை 11.25க்கு புறப்பட்டு மாலை 4.20க்கு மேட்டுபாளையம் சென்றடையும். நீட்டிக்கப்பட்ட சிறப்பு ரெயிலில் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்