பட்டினப்பாக்கம் கடற்கரையில் கல்லூரி மாணவர் பிணமாக மீட்பு; கொலையா? போலீசார் விசாரணை

ஜூடோ பயிற்சிக்காக சென்று மாயமான கல்லூரி மாணவர், பட்டினப்பாக்கம் கடற்கரையில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2023-01-27 12:34 GMT

கல்லூரி மாணவர் மாயம்

சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் லோகேஷ் (வயது 22). இவர், தனியார் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் எம்.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர், நேற்று முன்தினம் ஜூடோ பயிற்சிக்காக சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இரவு வரை அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். லோகேஷ் காணாமல் போய்விட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக ஐஸ்அவுஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

பிணமாக கிடந்தார்

இந்தநிலையில் நேற்று காலையில் சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை பகுதியில் லோகேஷ் பிணமாக கிடந்தார். கடல் அலையையொட்டி, அவரது உடல் கிடந்தது. பட்டினப்பாக்கம் போலீசார் லோகேசின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

லோகேஷ் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவர் கடலில் குதித்து தற்கொலை செய்தாரா? அல்லது யாராவது அவரை கொலை செய்து உடலை கடலில் வீசிவிட்டார்களா? என்பது குறித்து பட்டினப்பாக்கம் போலீசார் விசாரிக்கிறார்கள். லோகேஷ் மர்மமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்