திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள்- டிராக்டர் மோதல்; தொழிலாளி சாவு

திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி பலியானார்.

Update: 2022-07-28 06:46 GMT

திருவள்ளூர் ராஜாஜிபுரம் தந்தை பெரியார் சாலையை சேர்ந்தவர் உத்திரபதி (வயது 78). கூலித்தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் வேலையின் காரணமாக தனது மோட்டார் சைக்கிளில் காக்களூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்த டிராக்டர் ஒன்று எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளின் பின்னால் வேகமாக மோதியது. இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த அவருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டது.

இந்த விபத்தை கண்ட அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் உத்திரபதி பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

திருத்தணி ஒன்றியம், கே.ஜி.கண்டிகை கல்தி நகர் பகுதியை சேர்ந்தவர் அன்பரசி (வயது 21). இவர் கடந்த 23-ந் தேதி திருத்தணி இந்திரா நகர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது, கன்னிகாபுரத்திலிருந்து மாம்பாக்கம் செல்லும் வளைவு பாதையில் திடீரென பிரேக் போட்டதால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்த அவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்