டிப்பா் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; 2 வாலிபர்கள் பலி

டிப்பா் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2023-10-19 18:28 GMT

நெல்லை கட்டம்புலி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் அப்துல் அலி. இவரது மகன் நசீர் அலி (வயது 25). இவரும், நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் பிள்ளை தெருவை சேர்ந்த காஜா மொய்தீனின் மகன் முகமது ரியாஸ் (21) என்பவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை நசீர் அலி ஓட்டினார். நேற்று மதியம் அவர்கள் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, இரூரில் காரை பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது பெரம்பலூரில் இருந்து செட்டிகுளம் நோக்கி டிப்பர் லாரி சென்று கொண்டிருந்தது. அதன் டிரைவர் வலது புறம் அணுகு சாலையில் திருப்பிய போது எதிர்பாராதவிதமாக டிப்பர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயமடைந்த நசீர் அலி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து பயணம் செய்த முகமது ரியாஸ் படுகாயமடைந்தார்.

இதனைக்கண்ட அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் முகமது ரியாசை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த பாடாலூர் போலீசார் நசீர் அலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முகமது ரியாஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்