வகுப்பறையில் மாணவர்களுடன் அமர்ந்து நன்னெறி கதைகளை கேட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்

வகுப்பறையில் மாணவர்களுடன் அமர்ந்து நன்னெறி கதைகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டார்.

Update: 2024-08-30 14:51 GMT

குமரி,

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழகம் முழுவதும் 'காபி வித் கல்வி அமைச்சர்' என்ற நிகழ்ச்சி மூலம் மாணவ-மாணவிகளை நேரில் சந்தித்து வருகிறார்.

இந்த நிலையில், குமரி மாவட்டம் விளவங்கோடு வட்டத்தில் உள்ள கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கருங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பள்ளியில் நடைபெற்ற நன்னெறி வகுப்பில் மாணவர்களுடன் அமர்ந்து மாணவர்கள் கூறிய நன்னெறி கதைகளை கேட்டார்.

இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,

சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமாரின் கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கருங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 234/77 ஆய்வுத் திட்டத்தின் 177-வது ஆய்வை மேற்கொண்டோம். மாணவர்களுடன் அமர்ந்து மாணவர்கள் சொல்லிய நன்னெறிக் கதைகளைக் கேட்டதில் மிக்க மகிழ்ச்சி.

இந்தப் பள்ளியில் போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அது சார்ந்த புகார்களை அளிக்கவும் காவல்துறையினர் புகார் பெட்டி ஒன்றை வைத்துள்ளார்கள். காவல்துறை நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். ஆசிரியப் பெருமக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து, சுகாதார வளாகத்தை தூய்மையாக வைத்திருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ளுமாறு கல்வி அலுவலர்களிடம் அறிவுறுத்தி உள்ளேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்