பராமரிப்பு பணிகள்: கடற்கரை-தாம்பரம் மின்சார ரெயில் சேவையில் மாற்றம்

தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

Update: 2024-09-14 02:27 GMT

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது;

தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையிலான மின்சார ரெயில் சேவை நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்ட நேரங்களில் பயணிகளின் வசதிக்காக 30 நிமிடம் முதல் 1 மணி நேரம் இடைவெளியில் சென்னை கடற்கரை-பல்லாவரம் இடையே இருமார்க்கத்திலும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து காலை 8.35 மணிக்கு முதல் சிறப்பு ரெயில் புறப்பட்டு 9.25 மணிக்கு பல்லாவரம் சென்றடையும். இவ்வாறு 32 மின்சார ரெயில் சேவைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் இயக்கப்படும்.

கடைசி ரெயில் பல்லாவரத்தில் இருந்து மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு, இரவு 7.25 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடையும். அதன்பிறகு வழக்கமான மின்சார ரெயில் சேவை நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்