எஸ்.எஸ்.எல்.வி-டி3 ராக்கெட்: நாளை அதிகாலை 3.17 மணிக்கு கவுண்டவுன் தொடக்கம்

எஸ்.எஸ்.எல்.வி-டி3 ராக்கெட்டுக்கான 6 மணி நேரம் கவுண்டவுன் நாளை தொடங்குகிறது.

Update: 2024-08-15 05:33 GMT

சென்னை,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ , புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக 175.5 கிலோ எடை கொண்ட அதிநவீன இ.ஒ.எஸ்.-08 எனும் செயற்கைக் கோளை வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் சிறியரக எஸ்.எஸ்.எல்.வி. டி-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து சுதந்திர தினமான இன்று காலை விண்ணில் ஏவப்பட இருந்தது.

இந்த சூழலில் இ.ஓ.எஸ்-08 செயற்கைக்கோள் எஸ்.எஸ்.எல்.வி-டி3 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.17 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 3 நிலைகளை கொண்ட இந்த ராக்கெட்டில் உந்துசக்தி திட எரிபொருளை கொண்டது. அதன் அடிப்படையில் தற்போது இறுதிகட்டப்பணியான 6 மணி நேர கவுண்டவுன் நாளை அதிகாலை 3.17 மணிக்கு தொடங்குகிறது. தொடர்ந்து ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணிகள் நடந்து வருகிறது.

இந்த ராக்கெட் திட்டமிட்ட நேரத்தில் பூமியில் இருந்து புறப்பட்டு சரியாக 13 நிமிடத்தில் திட்டமிட்ட இலக்கான 475 கிலோ மீட்டர் தூரத்தில் பிரதான செயற்கைகோளான இ.ஓ.எஸ்.08-யும், தொடர்ந்து 16-வது நிமிடத்தில் மாதிரி செயற்கைகோளையும் நிலை நிறுத்திவிடும். தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைகோள்களின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இ.ஓ.எஸ்-08 செயற்கைக்கோளில் எலக்ட்ரோ ஆப்டிகல் இன்பராரெட் பேலோடு (இ.ஓ.ஐ.ஆர்.), குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்-ரிபிளக்டோமெட்ரி பேலோட் (ஜ.என்.எஸ்.எஸ்-ஆர்) மற்றும் எஸ்.ஐ.சி. யுவி டோசிமீட்டர் ஆகிய ஆய்வு கருவிகள் இணைக்கப்பட்டு உள்ளன. இந்த கருவிகளின் பணிக்காலம் ஒரு ஆண்டாகும். இந்த செயற்கைக்கோள் பூமியை 24 மணி நேரமும் புகைப்படம் எடுத்து கண்காணிக்கும். பேரிடர் கண்காணிப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, தீ கண்டறிதல் போன்ற பயன்பாடுகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்